Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அன்புடன் கவிதைப் போட்டி முடிவுகள்

Subscribe to Oneindia Tamil

-கவிஞர் புகாரி

அன்புடன் இரண்டாம் ஆண்டு விழாக் கொண்டாட்டங்கள் மார்ச் 2007 தொடங்கிக் கோலாகாலமாக நடந்து கொண்டிருக்கிறன. அதில் இவ்வாண்டின் சிறப்பம்சங்களில் ஒன்றான ஐவகைக் கவிதைப் போட்டிகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அன்புடன் யுனித்தமிழ்க் குழுமம் 2005ம் ஆண்டு மார்ச் மாதம் ஏழாம் தேதி திங்கட்கிழமை தொடங்கப்பட்டது. இன்று இம்மடல் எழுதும் நேரம்வரை 758 அன்பர்கள் அதில் இணைந்துள்ளார்கள், 66,393 மடல்களைத் தாண்டி அன்பையே அச்சாணியாகக் கொண்டு கருத்தாடல்கள் நடந்தி வருகிறார்கள். அன்புடன் தமிழில் எழுதுவோருக்கான குழுமம், யுனித்தமிழில் மட்டுமே அது இயங்குகிறது.

தமிழ்க் கவிதைகள், கட்டுரைகள், கதைகள், தமிழ் வளர்ச்சி, தமிழ் உறவுகள் பற்றிய எண்ணங்கள், தமிழ் கற்கும் பயிற்சிகள் போன்று ஆக்கப்பூர்வமான தலைப்புகள் பலவற்றிலும் அங்கே மடலாடல்கள் நிகழ்கின்றன. எப்படி யுனித்தமிழில் தட்டச்சுவது என்று அன்பர்களுக்கு அன்புடன் ஒரு சேவையாகச் சொல்லித்தருகிறது.

அன்புடனின் இரண்டாம் ஆண்டு நிறைவினையொட்டி பல நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டன. அவை அனைத்தும் அன்பர்களின் ஏகோபித்த வரவேற்புடன் வெற்றியுடன் முடிந்தும் இன்னும் நடைபெற்றும் வருகின்றன. அன்புடன் சுடரோட்டம் - ஆளுனர் முபாரக் - நடந்து கொண்டிருக்கிறது. அன்புடன் தித்திப்பு யுத்தம் - நடுவர் ஆனந்த குமார் - நடந்து முடிந்துவிட்டது. அன்புடன் பட்டிமன்றம் - நடுவர் ரசிகவ் ஞானியார் - நடந்து கொண்டிருக்கிறது.

அன்புடன் கவிதைப் போட்டிகள் - இதைப்பற்றித்தானே இப்போது எழுதிக் கொண்டிருக்கிறோம்..

அன்புடன் ஆண்டுவிழாக் கொண்டாத்தின் தலைவராகக் கவிஞர் ப்ரியன் (விக்கி) பொறுப்பேற்று சிறப்பாகச் செய்து வருகிறார். துவக்கம் முதலே அனைத்துப் பணிகளையும் வெகு சிறப்பாக சேதுக்கரசி செய்து வருகிறார்.

நடுவர்கள்

கவிதைப் போட்டிகளை ஐந்து வகையாகப் பிரித்துப் போட்டி வைத்தோம்.

1. இயல்கவிதை - வாசிக்கச்சுவை - கவிதையை யுனித்தமிழில் தட்டச்சு செய்து தரவேண்டும்.
2. படக்கவிதை - பார்க்கச்சுவை - கவிதையை கொடுக்கப்பட்ட படங்களுக்கு ஏற்ப எழுதித் தரவேண்டும்
3. ஒலிக்கவிதை - கேட்கச்சுவை - கவிதையை வாசித்துப் பதிவு செய்து தரவேண்டும்
4. இசைக்கவிதை - பாடச்சுவை - கவிதையை பாடிப் பதிவு செய்து தரவேண்டும்.
5. காட்சிக்கவிதை - இயக்கச்சுவை - கவிதையை இயங்கும் காட்சி இணைப்போடு பதிவு செய்து தரவேண்டும்


எதிர்பார்த்ததைவிட கவிதைப் போட்டிக்கு ஏராளமான கவிதைகள் வந்து குவிந்துவிட்டன. படைப்பாளிகளிடமிருந்து சில சந்தேகங்களும் எழுந்தன. அவற்றுள் முக்கியமான கேள்வி ஒன்றுக்கு இவ்வேளையில் பதில் தர விரும்புகிறேன். ஏன் மரபுக் கவிதைகளுக்கு என்று ஒரு பிரிவு ஏற்படுத்தவில்லை என்பதுதான் அந்தக் கேள்வி.

கவிதை என்றால் அனைத்து வகைகளும் ஒன்றுதான். கவிதைக்குள் கவிதை இருக்க வேண்டும் என்று மட்டுமே நினைப்பவர்கள் நாங்கள். கவிஞனிடமிருந்து கவிதையாய் மலர்ந்திருக்கும் கவிதை, களையாகிக் போன கவிதை முயற்சி என்ற இரு பிரிவுகள் மட்டுமே கவிதைகளில் உண்டு. மற்றபடி மரபுக் கவிதை, புதுக்கவிதை, ஹைக்கூ, நவீன கவிதை, பின் நவீனத்துவகவிதை என்றெல்லாம் நான் பிரித்து போட்டி வைக்கவில்லை. மேலும் மரபுக்கவிதைக்குள் வெண்பா, ஆசிரியப்பா, விருத்தப்பா, கலிப்பா, சிந்து என்றெல்லாம் பல பிரிவுகள் பிரித்து போட்டி வைக்க விரும்புவதும் இல்லை.

ஒருவர் தனக்குப் பிடித்த ஒரு வெண்பாவை எழுதி ஒரு படத்திற்குக் கவிதையாய் அனுப்பியிருக்கலாம். இன்னொருவர் ஒரு ஹைக்கூ கவிதையை வீடியோ காட்சி அமைத்து காட்சிக் கவிதைக்கு அனுப்பியிருக்கலாம். எல்லாமும் சமமாகவே கருதி நன்றாக வந்திருக்கும் கவிதையைப் பரிசுக்குரியதாய் நடுவர்கள் தேர்வு செய்வார்கள்.

மேலும் விளக்கமாகச் சொல்ல வேண்டுமானால், "காற்றுவெளியிடைக் கண்ணம்மா" என்ற கவிதையை பாரதி யுனித்தமிழில் தட்டச்சு செய்து மட்டும் அனுப்பி இருந்தாரானால் அது இயல் கவிதை பிரிவில் வெற்றி பெற்றிருக்கும். அதே கவிதையை தன் சொந்தக் குரலில் வாசித்து பதிவு செய்து அனுப்பி இருந்தாரானால் அது ஒலிக்கவிதை பிரிவில் வெற்றிபெற்றிருக்கும். அதே கவிதையை அவர் ராகத்துடன் பாடி பதிவு செய்து அனுப்பி இருந்தாரானால் அது இசைக் கவிதைப் பிரிவில் வெற்றிபெற்றிருக்கும்.

அதே கவிதையை அன்புடன் அனுப்பிய பத்தாவது படமான கடற்கரையில் நிற்கும் காதல் ஜோடிக்கு அனுப்பி இருந்தாரானால் அது படக் கவிதைப் பிரிவில் வெற்றிபெற்றிருக்கும். அதே கவிதையை ஜெமினி கணேசனையும் சாவித்திரியையும் வைத்து காட்சிப் படமாக்கி அனுப்பி இருந்தாரானால் அது காட்சிக் கவிதைப் பிரிவில் வெற்றிபெற்றிருக்கும்.

இதேபோல இந்த ஐவகைப் பிரிவுகளிலும் எவரும் மரபோ, புதுசோ, ஹைக்கூவோ, நவீனமோ, பின்நவீனமோ எழுதி இருக்கலாம். அன்புடன் அனைத்துக் கவிதைகளையும் அணைக்கும் அன்புடன்தான் இந்தப் போட்டிகளை அறிவித்தது. போட்டிக்குப் படைப்புகளை அனுப்பிவைத்த கவிஞர்கள் யார் யார் என்று எந்த நடுவருக்கும் தெரியாது. நடுவர்கள் யார் யார் என்று எவருக்குமே தெரியாது. அதைத் தெரிந்த மூவர்:

1. ஆண்டுவிழாத் தலைவர் ப்ரியன் என்கிற விக்கி
2. சேதுக்கரசி
3. நான் (புகாரி)

இப்போதும் நான் உங்களுக்கு இயல் கவிதைப் பிரிவின் நடுவர் மாலனை மட்டுமே அறியத் தந்திருக்கிறோம். அடுத்தடுத்த கவிதைப் பிரிவின் பரிசுக்கவிதைகளின் அறிவிப்பின் போதுதான் அந்தந்த நடுவர்களையும் முறையாக நாங்கள் உங்களுக்கு அறியத் தருவோம். படைப்பு மட்டுமே பரிசீலிக்கப்பட வேண்டும் என்ற எண்ணமே இதற்கான காரணம். ஆயினும் நாங்கள் தேர்வு செய்த அத்தனை நடுவர்களும் கவிஞர்களின் பெயர்களைத் தந்திருந்தாலும்கூட நடுநிலையாகவே தேர்வு செய்திருப்பார்கள்.

கவிதைப் போட்டிக்கு ஏராளமான கவிதைகள் வந்திருந்ததால் நடுவர் குழுவையும் அதற்கேற்றவாறு பல நடுவர்களாக நியமிப்பதே சரி என்று பட்டது. எழுத்தாளர் "திசைகள்" மாலனை நடுவராய் இருக்க அழைத்தோம். தன் பணிச்சுமைகளுக்கு இடையே அவர் அன்புடன் இயைந்தார். மாலனை அறியாதோர் இணையத்தில் இருக்க வாய்ப்பில்லை.

பரிசு பெற்ற கவிதைகள் தனியாகவும், நடுவரின் தேர்வுரை தனியாகவும் வருகிறது. அவற்றையும் தட்ஸ் தமிழ் இணையதளத்தில் காணலாம்.

அன்புடன் புகாரி

அன்புடன் யுனித்தமிழ்க் குழுமம்http://groups.google.com/group/anbudan

படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+