ஒலிக்கவிதைகளின் நடுவர் கவிஞர் கதுமு. இக்பால் அவர்களின் உரை
ஒலிக்கவிதைகளின் தேர்வுகள் பற்றி இரு நடுவர்களில் ஒரு நடுவரான கவிஞர் கதுமு. இக்பால் அவர்களின் நடுவர் உரை
கவிதைப் போட்டி நடத்துவதன் பயன்கள் பற்றி மீண்டும் எனக்கு நினைவூட்டுவதுபோல அமைந்தது இந்தப் போட்டி.
பல்வேறு சிந்தனைகளை தங்களுக்கு முடிந்த அளவில் மிகச் சிறந்த சொற்களைக் கொண்டு பலரும் படைக்க வழிசெய்வதால் போட்டி நடத்துபவர்களையும் அதில் பங்கெடுத்துக் கொள்ளும் கவிஞர்களையும் வாழ்த்தி வணங்கிப் பாராட்ட வேண்டும்.
எத்தனை அருமையான கவிதைகள் மலர்ந்து விட்டன இந்தப் போட்டியின் மூலம் ! எல்லாக் கவிதைகளையும் படிக்க வாய்ப்பு இல்லாவிட்டாலும், திரு மாலன் தேர்வுசெய்து தந்த கவிதைகளைப் படிக்கும் போது போட்டியின் பயன் நன்கு புரிந்தது.
போட்டி நடக்காமல் இருந்தால் இந்தக் கவிதை மணிகள் நமக்குக் கிடைத்திருக்குமா ! கவிஞர் புகாரி, சேதுக்கரசி, விக்கி ஆகியோரை இதற்காக எவ்வளவு பாராட்டினாலும் தகும் .
இதுவரை நான் அறியாதது இந்த ஒலிக்கவிதைப் போட்டி. வரவேற்க வேண்டிய புது முயற்சி. சில வாசிப்புகளைக் கேட்ட பின்னர், மீண்டும் அந்தக் கவிதைகளைப் படித்துச் சுவைக்க வேண்டும் என்னும் ஆர்வம் ஏற்பட்டது.அவ்வளவு அருமையாக, உணர்வுகளைக் கொட்டிய சங்கீதமாகச் சிலருடைய வாசிப்பு இருந்தது.
கவிதையை வாசிக்கத் தெரிந்தவர்கள் வாசித்தால், ஒவ்வொரு அசையும், சொல்லும், வரியும் என்னென்ன உணர்வுகளையெல்லாம் தூண்டும் என்பதை இந்த ஒலிக்கவிதைப் போட்டி அனுபவிக்க வைத்தது.
'ஒலிக்' கவிதைப் போட்டிக்கு வந்தவற்றில் ஒன்றிரண்டு மரபுக் கவிதையேனும் இருக்கும் என்னும் எதிர்பார்ப்புடன் இருந்தேன். இல்லாதது கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது. பரிசுக்குத் தேர்வு பெற்ற கவிதைகள் பற்றி நண்பர் கவிஞர் ஜெயபாரதன் அவர்கள் சொல்லி விட்டார்கள். அதுவே என் கருத்தும்.
வெற்றி பெற்ற அனைவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன்
இக்பால்
அன்புடன் யுனித்தமிழ்க் குழுமம்
http://groups.google.com/group/anbudan












Click it and Unblock the Notifications