தமிழ்தான் இந்தியாவின் வேர்
இந்திய இலக்கியத்தின் வேர் தமிழகத்தில்தான் உள்ளது. இந்தியில் வருவது மட்டுமே இலக்கியம் அல்ல என்று எழுத்தாளர் ஜெயகாந்தன் கூறியுள்ளார்.
கவிஞர் மு.மேத்தாவுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது. அவர் எழுதிய ஆகாயத்துக்கு அடுத்த வீடு என்ற கவிதைத் தொகுதிக்காக இந்த விருது கிடைத்துள்ளது.
இதையொட்டி மேத்தாவுக்கு சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது. நர்மதா பதிப்பகம், திருமகள் பதிப்பகம், கவிதா பதிப்பகம், குமரன் பதிப்பகம் ஆகியவை இணைந்து இந்த பாராட்டு விழாவை நடத்தின.
இதில் ஞான பீட விருது பெற்ற ஜெயகாந்தன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். வழக்கம் போல அணலும், ஆணித்தரமும் தெறிக்கப் பேசினார் ஜெயகாந்தன்.
இந்தி இலக்கியங்கள் மட்டுமே இந்திய இலக்கியங்கள் என்று கூறுவோர் வடக்கில் அதிகம் உள்ளனர். ஆனால் அது தவறு. இந்தியாவின் வேர் தெற்கில் தான் உள்ளது. குறிப்பாக தமிழத்தில்தான் உள்ளது.
இமய மலையையும், கங்கை நதியையும் தெற்கில் உள்ளவர்கள் போன்று யாரும் பாடியதில்லை. இவ்வளவு ஏன், இமயமலை அடிவாரத்தில் உள்ளவன் கூட அதைப் பற்றி கவிதை பாடி இருக்க மாட்டேன். ஆனால் நம் பாரதியோ மண்ணும் இமயமலை எங்கள் மாமலையே என்று பாடினான்.
சில விருதுகளால் பெறுபவர்களுக்கு பெருமை. சில நபர்களால் அந்த விருதிற்கு பெருமை. அப்படி விருதிற்கு பெருமை சேர்க்கக் கூடியவராக மேத்தா விளக்குகிறார்.
முன்பு நான், இவர்கள் எல்லாம் புதுக்கவிதை என்ற பேரில் அசட்டுத்தனம் செய்கிறார்கள் என்று கூறியதுண்டு. ஆனால் அக்கருத்தை இன்று நான் மாற்றிக் கொள்கிறேன்.
இங்கே நிறைய கவிஞர்கள் வந்துள்ளனர். எங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் தமிழால் நாங்கள் இணைந்துள்ளோம் என்றார் ஜெயகாந்தன்.
நிகழ்ச்சியில் பேசிய கவிஞர் வாலி, மு.மேத்தா எழுதிய நபிகள் நாயகத்தின் வரலாறு என்ற புதுக்கவிதை நூலை வாசித்த பின்பு தான், எனக்கு ஒரு உந்துதல் ஏற்பட்டு அவதார புருஷன் என்று ராமபிரானை பற்றி புதுக்கவிதை வடிவில் எழுதினேன் என்றார்.
கவிஞர்கள் முத்துலிங்கம், சிற்பி, பாலா, பழனிபாரதி, பா.விஜய் ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications