இந்தியாவை சார்ந்திருக்கும் மலேசியா
மலேசியாவின் பொருளாதாரம் இந்தியாவை சார்ந்திருப்பதால், இந்தியப் பிரதமர் உடனடியாக மலேசியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி எங்கள் சிக்கல்களுக்கு அமைதி தீர்வு காண வேண்டும் என்று இந்து உரிமை நடவடிக்கை இயக்கத்தின் தலைவர் வேதமூர்த்தி கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது,
மலேசியாவை மேம்படுத்த இந்தியாவில் இருந்து எங்கள் முன்னோர்களை ஆங்கிலேய அரசாங்கம் அழைத்து சென்றது. அங்கிருந்த காடுகளை வளப்படுத்தி, மேடுகளை பதப்படுத்தி மலேசியாவை வளம் கொழிக்கும் நாடாக அவர்கள் மாற்றியுள்ளனர்.
ஆனால் அங்கு இந்திய வம்சாவளியினர் மூன்றாம் தர குடிமக்களாக நடத்தப்படுகின்றனர். எங்கள் உரிமைகள் மறுக்கப்படுவதுடன், இந்து கோவில்கள் இடிக்கப்பட்டுள்ளன.
நாடு சுதந்திரமடைந்த போது 800 தமிழ் பள்ளிகள் இருந்தன. அப்போது இந்தியர்களின் எண்ணிக்கை 6 லட்சம் தான். ஆனால் இப்போது 20 லட்சம் பேர் இருந்தும் தமிழ் பள்ளிகளின் எண்ணிக்கை 523 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அப்பள்ளிகள் வசதியான தமிழர்களின் நிதியுதவியின் மூலம் நடத்தப்படுகின்றன.
அங்குள்ள தமிழர்கள் அனைவரும் பணக்காரர்கள் என்று நினைக்கக் கூடாது. அங்கு 30 சதவீத தமிழர்கள் வசதியாக உள்ளார்கள். ஆனால் 70 சதவீத தமிழர்கள் வறுமையில் வாடுகின்றனர்.
நாங்கள் உரிமை கேட்டால் உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்வார்கள். காந்தீய வழியில் போராட முடிவு செய்தோம். எங்கள் முன்னோர்களை மலேசியாவிற்கு அழைத்து சென்ற ஆங்கிலேய அரசு இழப்பீடு தர வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தோம். அதை வலியுறுத்தி பேரணி நடத்தினோம்.
எங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு ஆதரவு திரட்டவே இந்தியா வந்துள்ளேன். முதல்வர் கருணாநிதி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோரை சந்தித்து பேசினேன். டெல்லி சென்று பிரதமர் மன்மோகன் சிங் உட்பட மற்ற கட்சித் தலைவர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளேன்.
மலேசியாவின் பொருளாதாரம் இந்தியாவை சார்ந்திருக்கிறது. எனவே, இந்தியப் பிரதமர் உடனடியாக மலேசியாவுடன் பேச்சு வார்த்தை நடத்தி எங்கள் சிக்கல்களுக்கு அமைதி தீர்வு காண வேண்டும். மலேசியாவில் உள்ள சூழ்நிலைகளின் அடிப்படையில் எங்கள் இயக்கத்தின் பெயரில் இந்து என்று சேர்த்துள்ளோம் என்கிறார் வேதமூர்த்தி.












Click it and Unblock the Notifications