ஜல்லிக்கட்டுக்கு புது வாழ்வு!
தமிழர்களின் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு. பாரம்பரியமாக தென் தமிழகத்தின் வீர தீர விளையாட்டாக விளங்கி வருவது ஜல்லிக்கட்டு. இந்த ஜல்லிக்கட்டுக்கு சமீபத்தில் தடை ஏற்பட்டது. ஆனால் தமிழகத்தின் ஒட்டுமொத்த கோரிக்கை மற்றும் தமிழக அரசின் இடைவிடாத தீவிர முயற்சிகளின் பலனாக தடை நீங்கி பச்சைக் கொடி காட்டியது உச்சநீதிமன்றம்.
இதையடுத்து பொங்கல் பண்டிகை முதல் இன்று வரை தென் தமிழகத்திலும், தமிழகத்தின் இதர பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் தொடர்ந்து கொண்டுள்ளன.
இந்தசச நிலையில் ஜல்லிக்கட்டுக்கு மேலும் ஆக்கமும், ஊக்கமும் கொடுக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. ஜல்லிக்கட்டு விளையாட்டின் தரத்தையும், அதற்குத் தேவையான அடிப்படைக் கட்டமைப்பை மேம்படுத்தவும் அரசு திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் எஸ்.எஸ்.ஜவஹர் கூறுகையில், ஜல்லிக்கட்டுக்குப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு கிராமங்களில் நிரந்தர காலரிகள் அமைக்கப்படவுள்ளன. இதற்காக ஒவ்வொரு ஊருக்கும் தலா ரூ. 50 லட்சம் ஒதுக்கப்படவுள்ளது.
எதிர்காலத்தில் இந்த கேலரிகளில், நல்ல திட்டமிடுதல், பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றுடன் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். தமிழக அரசின் சுற்றுலா வளர்ச்சித் துறை இந்த நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து நடத்தும்.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்போடு, இந்த வீர விளையாட்டை ரசிக்க இந்த நிரந்தர காலரி திட்டம் பெரிதும் உதவியாகஇருக்கும்.
இதுதொடர்பான விரிவான திட்ட அறிக்கையை சமர்ப்பிக்குமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் பின்னர் அந்த அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்படும்.
இந்க காலரியில் வணிக வளாகமும் இணைந்திருக்கும். இதன் மூலம் கிடைக்கும் வருவாய் அந்த இரு கிராம பஞ்சாயத்துக்களுக்கும் நல்ல வருவாயைக் கொடுக்கும்.
ஜல்லிக்கட்டின் காரணமாக சர்வதேச வரைபடத்தில் அலங்காநல்லூரும், பாலமேடும் இடம் பெற்றுள்ளன. எனவே அங்கு அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டியது அவசியமாகிறது. இதற்காக அனைத்து டவுன் பஞ்சாயத்து அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் சிறப்புத் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன.
அதன்படி இரு கிராமங்களிலும் சிமென்ட் சாலைகள், பூங்காக்கள், குடிநீர் வசதிகள், சமுதாயக் கூடம், வணிக வளாகங்கள், குளங்களை ஆழப்படுத்துவது, சுத்தப்படுத்துவது உள்ளிட்ட பல காரியங்கள் நிறைவேற்றப்படவுள்ளன.
உச்சநீதிமன்றம் பிறப்பித்த கட்டுப்பாடுகள், நிபந்தனைகளின்படி வெற்றிகரமாக மதுரை மாவட்ட நிர்வாகம் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்தியுள்ளது.
இந்த ஆண்டு அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு கிராம ஜல்லிக்கட்டுக்களில் ஒருவர் கூட இறக்கவில்லை. காயங்களும் கூட பெரிய அளவில் ஏற்படவில்லை. மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் கூட எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை.
அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளை நானே நேரடியாக பார்வையிட்டு கண்காணித்தேன் என்றார் ஜவஹர்.
ஜல்லிக்கட்டை மிகுந்த பாதுகாப்புடனும், நல்ல திட்டமிடுதலுடனும், அனைவரும் கண்டுகளிக்கும் வகையிலும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அதிக அளவில் ஈர்க்கும் நோக்குடனும், தமிழக அரசு தீட்டியுள்ள நிரந்தர காலரி திட்டம் ஜல்லிக்கட்டு பிரியர்களுக்கு நிச்சயம் சந்தோஷமான செய்தியாகும் என்பதில் சந்தேகம் இல்லை.