புதுவை- நூலகம் அமைக்கும் ப.சண்முகம்
காரைக்கால்: சுமார் 50 ஆண்டுகால அரசியல் பணிக்குப் பின்னர், சொந்த ஊரில் நூலகம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார் புதுவை முன்னாள் முதல்வர் ப.சண்முகம்.
காரைக்கால் மாவட்டம், நெடுங்காட்டைச் சேர்ந்த ப.சண்முகம், புதுவையின் முதல்வராகவும் பின்னர், பிரதேச காங்கிரஸ் தலைவராகவும் பணியாற்றியவர். அண்மையில் இவர் மாற்றப்பட்டு ஏ.வி.சுப்பிரமணியம் தலைவராக நியமிக்கப்பட்டார்.
இளம் வயதிலேயே காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த சண்முகம், தன் 50 ஆண்டுகால அரசியலில் பல தலைவர்களின் ஆட்சியில் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினராக மட்டுமன்றி பல்வேறு பதவிகளையும் வகித்தவர்.
மாநில காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டவுடன் கடந்த மாதம் நெடுங்காட்டுக்கு வந்த சண்முகம், வீட்டுக்கு அருகே உள்ள பரந்த பகுதியில் ஏற்கெனவே உள்ள கட்டடத்தில் மாநிலத்திலேயே இல்லாத வகையிலான அரிய நூலகத்தை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து ப.சண்முகம் கூறியது:
காங்கிரஸ் கட்சி பற்றியும், அதன் பல்வேறு தலைவர்களின் செயல்பாடுகள், பேச்சுகள் என்று ஒட்டுமொத்தமாக கட்சியின் வரலாற்றை இளைஞர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் நூலகம் அமைக்கப்பட்டு வருகிறது.
புதுச்சேரிக்கு நேருவும், காமராஜரும் வந்தபோது, அமர்ந்த நாற்காலி, மேஜை, பல்வேறு தலைவர்களின் அரிய புகைப்படங்கள் ஆகியன நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இந்த நூலகம் முழுமை பெற ஓராண்டு ஆகும். இவை யாவும் சுய விளம்பரத்துக்காக அல்ல; இளைஞர்கள் காங்கிரஸ் கட்சி குறித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே என்றார் சண்முகம்.












Click it and Unblock the Notifications