அமீரக தமிழர் அமைப்பின் முப்பெரும் விழா
துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தின் வணிகத் தலைநகரான துபாயில் அமீரகத் தமிழர்கள் அமைப்பின் எழாவது ஆண்டு துவக்க விழா உள்பட, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு பாராட்டு விழா மற்றும் அமீரகத்தில் சமூக சேவையில் விருது பெற்றவர்களை கௌரவப்படுத்தும் விழா ஆகியவை முப்பெரும் விழாவாகக் துபாய் இந்தியன் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள ஷேக் ராஷித் உள்ளரங்கில் கொண்டாடப்பட்டது.
அமீரகத் தமிழர்கள் அமைப்பின் கௌரவத் தலைவர் அஜ்மான் மூர்த்தி தலைமை தாங்கினார். புரவலர் எல். கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார். அமீரகத் தமிழர்கள் அமைப்பின் தலைவர் அமுதரசன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
இதில் வீரமணி பேசுகையி்ல், தமிழக முன்னாள் முதல்வர் அண்ணா எழுதிய ஒரு கட்டுரையால் மனம் நெகிழ்ந்த பெரியார் அவரை பாராட்டுவதற்காக தனது வயதினையும், உடல் முதிர்ச்சியையும் பொருட்படுத்தாது கிளம்பிச் சென்றார்.
எனவே எவரையும் பாராட்ட வேண்டும் என எண்ணினால் உடன் பாராட்டும் மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும். மனித நேயத்துடன், உதவி செய்து வாழ பழகப் வேண்டும் என்றார்.
வளைகுடாவின் சிறந்த ஆசிய தொழிலதிபர் விருதுபெற்ற இந்தியரான இடிஏ அஸ்கான் ஸ்டார் மேலாண்மை இயக்குநர் சையது எம். சலாஹுத்தீன் தனது வாழ்த்துரையில்,
கி. வீரமணி அவர்களின் எளிமையைக் கண்டு நான் மிகவும் நெகிழ்ந்திருக்கிறேன். பெரியார் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் வாழும் பெரியாராக காட்சி தருகிறார் சத்யராஜ் என்றார்.
நடிகர் சத்யராஜ் தனது உரையில், அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்குச் செல்வோர் அங்கேயே தங்கி விடுகின்றனர். ஆனால், வளைகுடாவில் வாழ்ந்து வருவோரே தாயகத்திற்கு பல்வேறு பணிகளைச் செய்து பெருமிதம் கொள்கின்றனர் என்றார்.
அமீரகத் தமிழர்கள் அமைப்பின் ஏழாவது ஆண்டு துவக்க விழா மலரை கி. வீரமணி வெளியிட முதல் பிரதியை சையது எம். சலாஹுத்தீன் பெற்றுக்கொண்டார்.
விழாவில் அன்பு மருத்துவமனை குடந்தை அன்பழகன், அஜ்மான் மூர்த்தி, எல். கோவிந்தராஜ் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார். மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நிகழ்ச்சியினை திவ்யா தொகுத்து வழங்கினார்.
தகவல்: அமீரகத் தமிழர்கள் அமைப்பின் செய்திப்பிரிவு












Click it and Unblock the Notifications