மானாமதுரையில் ஓவியக் கோயில் கட்டும் டென்மார்க் கலைஞர்!
மானாமதுரை: மானாமதுரை அருகே ஓவிய கோயில் கட்டி வருகிறார் டென்மார்க் கலைஞர் ஒருவர்.
டென்மார்க்கைச் சேர்ந்தவர் சாமுவேல். அந்நாட்டு அரசு மாளிகையில் ஓவியராக பணியாற்றியவர். தற்போது மானாமதுரை அருகே மேலகொன்னங்குளம் ரயில் நிலையம் அருகே வசித்து வருகிறார். அப்பகுதி மக்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு சொந்தக்காரர்.
இவர் கடந்த 1997ம் ஆண்டு இந்தியாவுக்கு சுற்றுலா வந்த சாமுவேல், பல பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டு கடைசியாக தமிழகம் வந்தார்.
தமிழகத்துக்கு வந்த சாமுவேல் பல கோவில்களுக்கு சென்றார். தமிழக கோயில்கள் அவருக்குள் இருந்த கலை தாகத்தை தூண்டவே, தாய் நாட்டுக்கு செல்லவதை அடியோடு மறந்துவிட்டார். கடைசியாக மானாமதுரை வந்தவர் அங்கேயே தங்கிவிட்டார்.
கோயில் போன்ற அமைப்பில் ஒரு கட்டடத்தை கட்டி வருகிறார். இந்த கட்டடத்துக்கு ஓவியக் கோயில் என்று பெயர் வைத்துள்ளார். தற்போது முடியும் தருவாயில் உள்ள இந்த கட்டடத்தினுள் நிறைய ஓவியங்களை வரைந்து வருகிறார். விநாயகர், தென்னை மரங்கள் இவரது ஓவியத்தில் அதிகம் இடம் பிடித்துள்ளன.
அவரையும், ஓவியக் கோயிலின் அழகையும் அப்பகுதி மக்கள் வியந்து பார்க்கின்றனர்.
ஓவியங்கள்தான் எனது உயிர் மூச்சு. இங்கு உள்ள ஒவ்வொரு ஓவியத்திலும் எனது உயிரும், உணர்வும் கலந்துள்ளது. விரைவில் ஓவியக் கோவில் பணி நிறைவு பெறும். அப்போது மக்கள் பார்வைக்கு இன்னும் ஏராளமான ஓவியங்கள் கிடைக்கும் என்கிறார் சாமுவேல். கலைக்கும் கலைஞனுக்கும் தேசம் ஒரு எல்லையா என்ன..












Click it and Unblock the Notifications