காலத்தை வென்ற கண்ணதாசன்!

தமிழக அரசு பொது நூலகத்துறை மாவட்ட மைய நூலகம், நெல்லை மாவட்ட மைய நூலக வாசகர் வட்டம் ஆகியவை சார்பில், கவியரசு கண்ணதாசன் பிறந்த நாள்விழா, "தித்திக்கும் தீக்குச்சிகள்" நூல் அறிமுக விழா, மாணவ-மாணவிகளுக்கு இலவச குறிப்பேடுகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு வாசகர் வட்டத்தலைவர் அ.மரியசூசை தலைமை தாங்கினார். மாவட்ட நூலக அலுவலர் அ.மகாதேவன் முன்னிலை வகித்தார். வாசகர் வட்டச் செயலாளர் கவிஞர் கோ.கணபதி சுப்பிரமணியன் வரவேற்றார்.
இலவச குறிப்பேடுகள்
மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) சீனிவாசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு இலவச குறிப்பேடுகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார். இவற்றை எஸ்.வி.ஜானகிராம் அந்தோணி, டாக்டர் வே.அஜித், செல்வமுத்துக்குமாரி ஆகியோர் வழங்கி இருந்தனர். நிகழ்ச்சியில் அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர் டாக்டர் இளங்கோவன் செல்லப்பா எழுதிய தித்திக்கும் தீக்குச்சிகள் கவிதை நூலை, அருட்தந்தை அந்தோணி குரூஸ் அடிகளார் அறிமுகம் செய்து வைத்தார்.
நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு இலவச குறிப்பேடுகளை, மாவட்ட கலெக்டர் கோ.சீனிவாசன் வழங்கி பேசியதாவது:-
காலத்தால் அழியாத காவியம்
காலத்தால் அழியாத காவியம் கண்ணதாசன் பாடல்கள். கவியரசரின் தத்துவப் பாடல்கள் ஊக்கம் தரும், மகிழ்ச்சி தரும், அவரது தனிப் பாடல்கள் ஆழ்ந்த பொருள் தருபவை. நேற்றும் இன்றும் நாளையும் வாழும் தன்மை கொண்டவை. அவரது பாடல்களை கேட்டுக் கொண்டே இருக்கலாம். அது கருத்து பெட்டகம் என்றார்.
விழாவில் பன்னாட்டு மத சுதந்திர கூட்டமைப்பு தேசிய தலைவர் அரியநாயகிபுரம் எம்.சுப்பிரமணியம், ஐ.பி.எஸ்.தேர்வில் வெற்றி பெற்றுள்ள சங்கர் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர் பி.சங்கர் குட்டி, கவிஞர் கு.சுயம்புலிங்கம் ஆகியோரின் பணிகளை, மாவட்ட கலெக்டர் கோ.சீனிவாசன் பாராட்டி பேசினார். பெல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி எஸ்.கிருத்திகா "கவியரசு கண்ணதாசன் ஒரு சகாப்தம்" என்ற தலைப்பில் பேசினார்.
முன்னதாக நூலாசிரியர் டாக்டர் இளங்கோவன் செல்லப்பா ஆயிரம் ரூபாய் செலுத்தி நூலக புரவலர் ஆனார்.
நிகழ்ச்சியில் பேராசிரியர் மூர்த்தி, எஸ்.கணபதி சுப்பிரமணியன், சந்திரபாபு, எச்.நடராஜன், நூலகர்கள் தேவகி, முத்துகிருஷ்ணன், ரேவதி ராஜேஸ்வரி, மாடசாமி, பலவேசம், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நூலகர் அ.முத்துகிருஷ்ணன் நன்றி கூறினார்.












Click it and Unblock the Notifications