கருணாநிதி செம்மொழி அறக்கட்டளை விருதுக்கு கருணாநிதி ரூ. 1 கோடி
சென்னை: கலைஞர் கருணாநிதி செம்மொழி அறக்கட்டளை மூலம் பயன்மிக்க கல்வெட்டுகளை ஆய்வு செய்பவர்களுக்கு விருதுகள் வழங்கிட தமது சொந்த நிதியில் இருந்து ஒரு கோடி ரூபாய் நிதியை முதல்வர் கருணாநிதி இன்று வழங்கினார்.
சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன அலுவலகத்தை கடந்த மாதம் 30ம் தேதி முதலமைச்சர் கருணாநிதி திறந்து வைத்தார்.
அந்த விழாவில் பேசிய முதல்வர், இந்த நிறுவனத்தின் பொறுப்பில் தமது பெயரில் அறக்கட்டளை ஒன்றை அமைத்து கல்வெட்டுகளை ஆய்வு செய்பவர்களுக்கு விருதுகள் மற்றும் பொற்கிழிகள் வழங்க தமது சொந்த நிதியில் இருந்து ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தார்.
அந்த அறிவிப்புக்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில் தமது சொந்த நிதியில் இருந்து ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை செம்மொழி நிறுவனத்தின் பொறுப்பு அலுவலர் பி.மருதநாயகத்திடம் முதலமைச்சர் கருணாநிதி இன்று வழங்கினார்.
அப்போது அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, பொன்முடி, எ.வ.வேலு, தமிழ் வளர்ச்சித் துறை செயலாளர் ஜி.முத்துசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.