தமிழில் பெயர் மாற்றம்: ஊழியர்களுக்கு ஏன் இவ்வளவு தமிழ் வெறுப்பு?

தமிழில் தங்கள் பெயரை மாற்றிக் கொள்பவர்களுக்கு அரசு அறிவித்துள்ள கட்டணச் சலுகை திட்டம் நடைமுறைக்கு வந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் இதுவரை மக்களிடையே அதற்கு வரவேற்பு இல்லை. காரணம் பலருக்கு இதுகுறித்து எந்த விவரமும் தெரியாத அளவுக்கு படுரகசியமாகவே இத்திட்டம் வைக்கப்பட்டிருப்பதுதான்.
இது குறித்து, பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் அரசு அதிகாரிகள் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகின்றனர்.
பொதுமக்கள் தங்கள் பெயர், மதம் உள்ளிட்டவற்றை மாற்றி அவற்றை அரசிதழில் வெளியிடச் செய்ய ரூ. 415 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆனால் தமிழில் பெயர் மாற்றம் செய்து அதை அரசிதழில் வெளியிட கட்டணம் ரூ. 115 ஆகக் (தபால் கட்டணம் உட்பட) குறைக்கப்பட்டது. கடந்த 2006-ம் ஆண்டு ஆகஸ்ட் 3-ம் தேதி இதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. அதே ஆண்டு டிசம்பர் 13-ம் தேதி அது நடைமுறைக்கு வந்தது.
ஊழியர்களின் அடாவடி!
பெயர் மாற்றம் செய்து அதை அரசிதழில் வெளியிடும் பணியை, எழுதுபொருள் அச்சுத்துறை ஆணையரகம் மேற்கொள்கிறது.
சென்னை அண்ணா சாலையில் ஹிக்கின் பாதம்ஸ் அருகே அச்சுத்துறை ஆணையரகம் செயல்பட்டு வருகிறது. தமிழில் பெயர் மாற்றினால் கட்டணச் சலுகை அளிக்கப்படும் என்ற அறிவிப்பை அங்கு எங்கு தேடினாலும் தெரியவில்லை. மேலும், விண்ணப் படிவம் விநியோகிக்கும் ஊழியர்களும் அதில் பெரிதாக அக்கறை காட்டுவதில்லை.
இந்தத் தடைகளையெல்லாம் தாண்டி உள்ளே வரும் நபர்களிடம், தமிழில் பெயர் மாற்றினால் அது தமிழகத்துக்குள்தான் செல்லுபடியாகும். அரசிதழைக் கொண்டு குடும்ப அட்டையில் மட்டுமே பெயரை மாற்றிக் கொள்ள முடியும். பள்ளிக்கூட மாற்றுச் சான்றிதழ் போன்றவற்றில் பயன்படுத்துவது கடினம். ஆங்கிலம் என்றால் பிரச்னை இருக்காது, என்று அங்கு பணிபுரியும் ஊழியர்களே கூறி திருப்பி அனுப்பி விடுகிறார்கள்.
அப்படியும் பிடிவாதமாக விண்ணப்பம் கேட்பவர்களிடம் ஏகப்பட்ட விதிமுறைகளைச் சொல்லி அதிருப்திக்குள்ளாக்கும் பணியைச் செவ்வனே செய்து வருகின்றனர் தமிழக அரசின் அச்சுத் துறை ஆணையரக ஊழியர்கள்.
வாழ்க தமிழ்!












Click it and Unblock the Notifications