ரயில் விபத்தைத் தடுக்க உதவிய சிறுவனுக்கு தேசிய தீரச் செயலுக்கான விருது
மதுரை: தண்டவாளத்தில் உடைப்பு ஏற்பட்டிருந்ததைக் கண்டு, தனது தங்கையின் சிவப்பு நிறை ஆடையை கழற்றி அதை அசைத்து திண்டுக்கல்- மதுரை பாசஞ்சர் ரயிலை நிறுத்தி பெரும் விபத்திலிருந்து காத்த 13 வயது சிறுவனுக்கு தேசிய அளவில் வழங்கப்படும் தீரச் செயலுக்கான விருது கிடைத்துள்ளது.
திண்டுக்கல் அருகே உள்ள தோமையர்புரத்தைச் சேர்ந்த சிறுவன் மருதுபாண்டியன். 13 வயதாகும் இவனது தந்தை முருகேசன், பிளாஸ்டிக் குடங்களை விற்றுப் பிழைப்பு நடத்தி வருகிறார்.
இந்த ஆண்டு ஜூன் மாதம் 26ம் தேதி காலை 8 மணியளவில் மருதுபாண்டியன் தனது 2 வயது தங்கை ரேவதியுடன் வீட்டுக்கு அருகே உள்ள ரயில்வே டிராக் அருகே அமர்ந்து ரயில்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
அப்போது மதுரை - சென்னை வைகை எக்ஸ்பிரஸ் ரயில் கடந்து சென்றது. அதை உற்சாகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தபோது, தண்டவாளத்தின் ஒரு பகுதி பலத்த சப்தத்துடன் உடைந்து தூக்கி எறியப்பட்டது.
இதைப் பார்த்த மருதுபாண்டியனுக்கு விபரீதம் ஏதோ நடக்கப் போவதாக உணர்ந்துள்ளான். இதையடுத்து தனது தங்கையைத் தூக்கிக் கொண்டு அரை கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சிறுநாயக்கன்பட்டி ரயில்வே கேட்டுக்கு ஓடினான்.
அங்கிருந்த கேட்கீப்பரிடம் விஷயத்தைக் கூறினான். பின்னர் தங்கையைத் தூக்கிக் கொண்டு வீடு திரும்பினான். வரும் வழியில், எதிரே திண்டுக்கல் - மதுரை பாசஞ்சர் ரயில் வருவதைப் பார்த்து திடுக்கிட்டான்.
உடைந்த தண்டவாளத்தின் மீது ரயில் ஏறிச் சென்றால் பெரும் விபத்து ஏற்படுமே என அஞ்சிய அவன், புத்திசாலித்தனமாக செயல்பட்டு, தனது தங்கை அணிந்திருந்த சிவப்பு நிற ஆடையை கழற்றினான்.
பின்னர் தண்டவாளத்தின் நடுவே நின்று கொண்டு அந்த சிவப்பு நிற ஆடையை ஆட்டியுள்ளான். இதைப் பார்த்த என்ஜின் டிரைவர் ஏதோ விபரீதம் போல என்று நினைத்து உடனடியாக ரயிலை நிறுத்தினார்.
தண்டவாளத்தில் உடைப்பு ஏற்பட்ட இடத்திலிருந்து 30 மீட்டர் தொலைவில் ரயில் நின்றது. இறங்கி வந்து பார்த்த என்ஜின் டிரைவர் சிறுவன் மருதுபாண்டியனின் புத்திசாலித்தனத்தால் மிகப் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டிருப்பதை உணர்ந்தார்.
உடனடியாக அவர் திண்டுக்கல் ரயில் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தார்.
இதையடுத்து நெல்லை - மயிலாடுதுறை பாசஞ்சர், நாகர்கோவில் - திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில்கள் கொடை ரோட்டுடன் நிறுத்தப்பட்டன.
மருதுபாண்டியன் மட்டும் தண்டவாள உடைப்பை கவனிக்காமல் இருந்திருந்தால் மிகப் பெரிய விபத்து நேரிட்டிருக்கும்.
திண்டுக்கல்லில் உள்ள புனித சேவியர் நடுநிலைப்பள்ளியில், எட்டாவது வகுப்பு படித்து வருகிறான் மருதுபாண்டியன். அவனது செயலைப் பாராட்டி தெற்கு ரயில்வே பரிசளித்தது. தற்போது அவனுக்கு தேசிய அளவில் வழங்கப்படும் தீரச் செயலுக்கான விருது கிடைத்துள்ளது.
இதுதொடர்பான கடிதம் அவனது வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளது. குடியரசு தினமான ஜனவரி 26ம் தேதி டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவின்போது மருதுபாண்டியனுக்கு தேசிய விருதினை பிரதமர் மன்மோகன் சிங் வழங்குகிறார்.
தனது பேரனுக்குக் கிடைத்துள்ள இந்தப் பெருமை மிகு விருது குறித்து மருதுபாண்டியனின் தாத்தா அந்தோணி சாமி கூறுகையில், ஜனவரி 16ம் தேதியே டெல்லிக்கு வந்து விடுமாறு அழைக்கப்பட்டுள்ளது. எனது பேரனுக்கும், அவனது தந்தைக்கும் ரயில் பயணத்திற்கான டிக்கெட்டையும் அனுப்பியுள்ளனர்.
விருது வழங்கும் நிகழ்ச்சியின்போது அணிவதற்காக புதிய உடை தரப்படும் என தெரிவித்துள்ளனர். எல்லோரும் டெல்லி போக வேண்டும் என ஆசைப்படுகிறோம். ஆனால் எங்களது நிதி நிலை அதற்கு இடம் தராதே என்கிறார் வெள்ளந்தியாக.












Click it and Unblock the Notifications