மேலாண்மை பொன்னுச்சாமியின் 'மின்சாரப் பூ' தொகுப்புக்கு சாஹித்ய அகாடமி விருது

இந்த ஆண்டுக்கான விருது மொத்தம் 7 நாவல்கள், 6 கவிதை நூல்கள், 5 சிறுகதைத் தொகுப்புகள், 2 விமர்சன நூல்கள் மற்றும் ஒரு கட்டுரைத் தொகுப்புக்குக் கிடைத்துள்ளது.
தமிழில், எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமியின் மின்சாரப் பூ என்ற சிறுகதைத் தொகுப்புக்குக் கிடைத்துள்ளது.
அவருக்கு ரூ. 50 ஆயிரம் பரிசு, தாமிரப் பட்டயம் ஆகியவை பரிசாக வழங்கப்படும். பிப்ரவரி 17ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் மேலாண்மை பொன்னுச்சாமி உள்ளிட்ட 21 எழுத்தாளர்களுக்கும் விருது வழங்கப்படவுள்ளது.
விருதுநகர் மாவட்டம் மேலாண்மறை நாடு கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னுச்சாமி. கரிசல் பூமி தந்த சிறந்த எழுத்தாளர்களில் இவரும் ஒருவர். கரிசல் பூமி மக்களின் வாழ்க்கையை எதார்த்தமாகவும், உயிரோட்டமாகவும் எழுதுவதில் தலை சிறந்தவர்.
சிறுகதை செம்மல் என அழைக்கப்படும் பொன்னுச்சாமியின் கதை நூல்கள் தமிழக அரசின் விருதையும் பெற்றுள்ளன. இவருடைய மானாவரிப்பூ 33 சிறந்த சிறுகதைகள் அடங்கிய தொகுப்புக்கு சி.பா. ஆதித்தனார் இலக்கிய விருது கிடைத்துள்ளது.
மளிகைக் கடை நடத்துகிறார்:
இவ்வளவு சிறந்த எழுத்தாளராக திகழும் பொன்னுச்சாமி 5 வது வகுப்பு வரை மட்டுமே படித்தவர். மளிகைக் கடை நடத்தி வருகிறார்.
சாஹித்ய அக்டாமி விருது குறித்து மேலாண்மை பொன்னுச்சாமி கருத்து தெரிவிக்கையில், இதை நான் எதிர்பார்க்கவில்லை. ஒடுக்கப்பட்ட மக்களைப் பற்றிய இலக்கிய வெளிப்பாட்டுக்குக் கிடைத்த வெற்றியாக இதைக் கருதுகிறேன் என்று கூறியுள்ளார்.
மேலாண்மை பொன்னுச்சாமி இதுவரை 24 சிறுகதைத் தொகுப்பு, 6 நாவல்கள், 6 குறு நாவல்கள், ஒரு கட்டுரைத் தொகுப்பை எழுதியுள்ளார்.
பல ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொண்டர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை நிறுவியவர்களில் இவரும் ஒருவர்.
மேலாண்மை பொன்னுச்சாமிக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வரதராஜன் பாராட்டு தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications