2008ன் முக்கிய சம்பவங்கள்!

டிவியில் லைவ் ஒளிபரப்பு செய்யப்பட்ட ஒரே தீவிரவாதத் தாக்குதல் மும்பை தீவிரவாதத் தாக்குதலாகத்தான் இருக்க முடியும். அதுவும் 3 நாட்களுக்கு நேரடியாக ஒளிபரப்பி உலகம் முழுவதும் நம் பக்கம் ஈர்க்க வைத்து விட்டன இந்திய தொலைக்காட்சிகள்.
நியூயார்க் உலக வர்த்தக மையம், தீவிரவாதிகளால் விமானம் மூலம் தகர்க்கப்பட்டபோது எப்படி உலகம் அதிர்ந்ததோ அதே அளவிலான அதிர்ச்சியை, நவம்பர் 26ம் தேதி மும்பையில் நடந்த தீவிரவாதத் தாக்குதலும் ஏற்படுத்தியது.
கடல் மார்க்கமாக ஊடுறுவிய தீவிரவாதிகள், படு சாவாதனமாக மும்பைக்குள் நுழைந்து, கண்மூடித்தனமாக சுட்டு அப்பாவி மக்களை வீழ்த்திய கொடூரம் உலக மக்களை உறைய வைத்தது.
தாஜ், டிரைடென்ட், ஓபராய் ஹோட்டல்கள் மற்றும் நாரிமன் ஹவுஸைப் பிடித்துக் கொண்டு அப்பாவிகளை குருவி சுடுவது போல சுட்டும், கையெறி குண்டுகளை வீசி ரணகளப்படுத்தியும் துவம்சம் செய்து விட்டனர் எதிரிகள்.
இந்திய கமாண்டோ படையினர் உள்ளே புகுந்த தீவிரவாதிகளுடன் உயிரைப் பணயம் வைத்து கடுமையாக போராடி, 9 தீவிரவாதிகளை சுட்டு வீழ்த்தினர். முகம்மது அஜ்மல் அமீன் கஸாப் மட்டும் சிக்கினான்.
அப்பாவி மக்களுக்கு எதிராக நடந்த இந்த கொடூரத் தாக்குதல் நாட்டு மக்கள் கொந்தளித்தனர், நமது அரசியல்வாதிகளின் அலட்சியப் போக்கை காறித் துப்பி குமுறினர்.
நாட்டு மக்களின் வேதனையில் வெண்ணீர் ஊற்றுவது போல, இதெல்லாம் சாதாரண தாக்குதல்தான் என்று கூறி வெறுப்பை வாரிக் கட்டிக் கொண்டார் மகாராஷ்டிர துணை முதல்வர் ஆர்.ஆர்.பாட்டீல்.
மக்களின் வெறுப்பு அரசியல்வாதிகள் பக்கம் திரும்பியதாலும், எதிர்க்கட்சிகளின் கடும் கண்டனைக் கணைகள் காய்ச்சி எடுத்ததாலும், உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், மகாராஷ்டிர முதல்வர் விலாஸ் ராவ் தேஷ்முக், துணை முதல்வர் ஆர்.ஆர்.பாட்டீல் ஆகியோர் அடுத்தடுத்து பதவி விலகினார்.
இது மட்டுமா?
பெங்களூரில் 7 இடங்களில், அகமதாபாத்தில் 14 இடங்களில், தொடர்ந்து ஜெய்ப்பூரில், மாலேகானில், அஸ்ஸாமில் என தொடர் குண்டுவெடிப்புகள் நாட்டை உலுக்கின. சூரத்தில் குவியல் குவியலாக அடுத்தடுத்து வெடிக்காத வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
மென்மையான இந்தியாவுக்கு 2008ம் ஆண்டு கண்டிப்பாக ஒரு தீவிரவாத ஆண்டு என்பதில் சந்தேகம் இல்லை.












Click it and Unblock the Notifications