மனித உரிமைகள் பெயரில் கட்டப் பஞ்சாயத்து-தி.க.சி. வேதனை
நெல்லை: மனித உரிமை இயக்கம் என்ற பெயரில் கட்டப் பஞ்சாயத்துக்கள் மலிந்து விட்டதாக எழுத்தாளர் தி.க.சி வேதனை தெரிவித்தார்.
மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்கத்தின் மனித உரிமை மீறல்கள்-2007 என்ற புத்தகம் வெளியிட்டு விழா நெல்லையில் நடைபெற்றது. மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜன் தலைமை வகித்தார்.
சாகித்திய அகடாமி விருது பெற்ற எழுத்தாளர் தி.க.சிவசங்கரன் புத்தகத்தை வெளியிட மனித உரிமை மீறலால் பாதிக்கப்பட்ட லெட்சுமணன் பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் தி.க.சி பேசுகையில், வச்சாத்தி, சிதம்பரம் பத்மினி வழக்கு போன்ற ஏராளமான சம்பவங்கள் மனித உரிமை மீறல்களுக்கு சாட்சியாக உள்ளன. இதுபோல் காவல் துறையில் வன்முறைகள் சட்டத்தின் பெயரால் நடந்து வருகின்றன. இவற்றை கட்டுபடுத்த இயக்கங்கள் தேவை.
ஆனால் பெரும்பாலான இயக்கங்கள் மனித உரிமை மீறல்களை கட்டுபடுத்துவதற்கு பதிலாக கட்டப்பஞ்சாயத்துகளில் ஈடுபடுகின்றன. இவற்றை அடையாளம் கண்டு அப்புறப்படுத்த வேண்டும். கட்சி பகுபாடின்றி அறிவொளி இயக்கமாக இதனை நடத்த வேண்டும் என்றார் அவர்.