விபத்தில் இறந்த மாணவியின் கண்கள் தானம்
தூத்துக்குடி: சாலை விபத்தில் இறந்த கல்லூரி மாணவியின் கண்களை அவரது பெற்றோர் தானமாக அளித்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சி சிலோன் காலனியை சேர்ந்த மாணவி உமா ஜெயந்தி. இவர் பசுவந்தனை அருகேயுள்ள நாகம்பட்டி மனோ கல்லூரியில் பிஎஸ்சி கணிதம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
கடந்த 5ம் தேதி கல்லூரி மாணவிகளுடன் நடந்து வந்தபோது மோட்டார் சைக்கிள் மோதி பலத்த காயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை 3.15 மணி அளவில் அவர் இறந்தார்.
இதுகுறித்து அவரது பெற்றோர் துரைராஜ்-புவனேசுவரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு வந்த துரைராஜ் தனது மகளின் கண்களை தானமாக கொடுக்க விரும்புவதாக மருத்துவமனை மருத்துவ அதிகாரி டாக்டர் விசுவநாதனிடம் எழுதி கொடுத்தார்.
இதையடுத்து கண்களை தானமாக எடுக்கும் நடவடிக்கைகளை மருத்துவமனை மேற்கொண்டது.
இதுகுறித்து உமா ஜெயந்தியின் தந்தை துரைராஜ் கூறும்போது, எனது மகள் இறந்து விட்டாள். ஆகையினால் மண்ணில் புதையும் அவளது கண்கள் வேறு யாருக்காவது உதவ வேண்டும், அதன்மூலம் அவள் தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருப்பாள். அதற்காக தானமாக கொடுக்க எழுதி கொடுத்து உள்ளேன் என்றார்.












Click it and Unblock the Notifications