அரவாணிகள் தத்தெடுப்பு விழா
சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் வட்டார கிராமிய கலைஞர்கள் முன்னேற்ற சங்க சார்பில் அரவாணிகள் தத்தெடுப்பு விழா நடந்தது.
சங்கரன்கோவில் பாரதியார் தெருவில் உள்ள அனைத்து வட்டார கிராமிய கலைஞர்கள் முன்னேற்ற சங்க அலுவலகத்தில் அரவாணிகள் தத்தெடுப்பு விழா நடந்தது.
விழாவிற்கு சங்க செயலாளர் புதுக்குளம் கவிதா தலைமை தாங்கினார். சமுத்திர வேலு, மணலூர் கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் வீட்டை விட்டு வந்த 2 அரவாணிகளை கிராமிய கலைஞர்கள் முன்னேற்ற சங்கத்தினர் தத்தெடுத்தனர். லுங்கி, சட்டையுடன் வந்த அரவாணிகளுக்கு சங்க அலுவலகம் முன்பு பெண்ணுக்கு மடிகட்டுதல் விழா நடந்தது.
முதலில் அவர்களை மற்ற அரவாணிகள் சேர்ந்து புனித நீராட்டினர். பின்னர் தாம்பூலத்தில் சேலை கொண்டு வந்து இரு அரவாணிகளுக்கும் கட்டினர். அதன்பிறகு சங்க செயலாளர் கவிதா, அரவாணிகளுக்கு ஆரத்தி எடுத்து அனிதா, சுதா என பெயரிட்டார்.
தொடர்ந்து சங்கத்தை சேர்ந்த 2 அரவாணிகளுடன் தத்தெடுத்த அரவாணிகளுக்கு திருமண வைபகம் நடந்தது. பின்னர் மணமக்களுக்கு மொய் வழங்கப்பட்டது. தம்பதிகளுக்கு மற்ற அரவாணிகள் புதிய உறவுகளாக அறிமுக செய்து வைக்கப்பட்டனர்.
பின்னர் சங்க செயலாளர் புதுக்குளம் கவிதா அரவாணிகள் சமுதாயத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று விளக்கி கூறினார். அரவாணிகளை யாரும் துன்புறுத்தினால் அனைவரும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.












Click it and Unblock the Notifications