பெனாசிருக்கு 'தாஜ் மஹலா?': தம்பி மகள் எதிர்ப்பு
முன்னாள் பிரதமர் பெனசிர் பூட்டோ, ராவல்பிண்டி அருகே நடந்த தீவிரவாதத் தாக்குதலில் பலியானார். அவரது உடல் சிந்து மாகாணத்தில் உள்ள அவரது குடும்பத்தினருக்குச் சொந்தமான பாரம்பரிய இடமான, கர்கி குதா பக்ஸ் என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
தற்போது பெனாசிரின் கல்லறை, பல கோடி ரூபாய் செலவில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு பூட்டோவின் தம்பி மகள் பாத்திமா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாகிஸ்தானின் அப்சர்வர் நாளிதழில் பாத்திமா எழுதியுள்ளதாவது ...
பூட்டோ குடும்பத்தில் மற்றவர்களை விட தனக்கு தான் அதிக புகழ் கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் பெனாசிருக்கு இருந்தது. தற்போது அவரது கல்லறையும் தாஜ்மகாலின் ஜெராக்சாக இருக்கிறது.
ஆடம்பரத்தில் நாட்டம் கொண்டவர் பெனாசிர். அவரது குடும்ப இல்லத்தைக் கூட அலாவுதீன் கோட்டை பாணியில்தான் வடிமைத்திருந்தார் முன்பு.
இப்போது பெனாசிரின் கல்லறையை ஆடம்பரமாக செலவிட்டு மாற்றியுள்ளதால், அங்குள்ள பூட்டோ குடும்பத்தினரின் பிற கல்லறைகளுக்கு இனி முக்கியத்துவம் இல்லாமல் போய்விடும்.
இந்தியாவின் தாஜ்மகால் கட்டட அமைப்பை பின்பற்றி பெனாசிரின் கல்லறையைக் கட்டியுள்ளனர்.
பெனாசிரின் கல்லறையில் கலைநயமிக்க பின்னல் வேலைப்பாடு நிறைந்த ஜன்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன. கல்லறையைச் சுற்றி, பல திசைகளிலும் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் கல்லறையைச் சுற்றி சுவர்கள் இல்லை.
பெனாசிரின் கல்லறை இங்கு அமைந்தவுடன், அங்கிருக்கும் பூட்டோ குடும்பத்தினரின் மற்ற கல்லறைகளுக்கு அதிக முக்கியத்துவம் இல்லாமல் போய்விட்டது.
இது பெனாசிர் தனக்குத் தானே கட்டிக் கொண்ட கோவில் போல மாறியுள்ளது. இங்கு புனிதத்திற்கு இடம் இல்லை. துக்கத்திற்கு இடமில்லை. விளம்பரம்தான் பளிச்சிடுகிறது. அரசியல்தான் தலை தூக்கியுள்ளது.
எனது குழந்தைகள் தான் இனி உங்களுக்கு எல்லாமே. அவர்கள்தான் பாகிஸ்தானின் எதிர்காலம் என்று பெனாசிர் கூறுவது போல உள்ளது.
உயிருடன் இருந்தபோதும் கொள்கைப் பிடிப்பில்லாதவராக, சுய விளம்பரம் தேடுபவராக இருந்தார் பெனாசிர். இப்போது மறைந்த பிறகும் அதுதான் தொடருகிறது. இதுதான் பெனாசிரின் பாரம்பரியம்.
பூட்டோ குடும்பத்தில் மற்றவர்களை விட தனக்கு தான் அதிக புகழ் கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் பெனசிருக்கு இருந்தது. அவரது கல்லறை வடிவமைப்பும், அதையே தான் வெளிகாட்டுகிறது.
கல்லறை வளாகத்திற்கு வெளியே வெறும் வியாபாரிகள்தான் நிறைந்துள்ளனர். பக்கோடா விற்பனையாளர்கள், இதுவரை இறந்துள்ள பூட்டோ குடும்பத்தினரின் புகைப்படங்கள், போஸ்டர்கள், பெனாசிர் பூட்டோவின் ஆடியோ பேச்சுக்கள் ஆகியவைதான் அங்கு விற்பனையாகிக் கொண்டுள்ளன. இது மிகவும் கொடுமையானது.
பாகிஸ்தான் மக்களுக்கு பெனாசிர் பூட்டோவின் மறைவுக்கு துக்கம் அனுஷ்டிப்பதை விட நிறைய கவலைகள் உள்ளன. ஆனால் அவர் மறைந்து ஒரு வருடமாகியும் கூட அந்தக் கவலைகளுக்குள் நாம் போக முடியாத அளவுக்கு பெனாசிரின் நிழல் தொடருவது வருத்தத்திற்குரியது என்று கூறியுள்ளார் பாத்திமா.
பெனசிருக்கும், அவரது சகோதரர் குடும்பத்திற்கும் சுமூக உறவு இருந்ததில்லை. குறிப்பாக பாத்திமா, பெனாசிரின் தீவிர விமர்சகர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.