துபாய் ஈமான் அமைப்பு நடத்திய மானுட வசந்தம் நிகழ்ச்சி
துபாய்: துபாயில் ஈமான் அமைப்பினர் சார்பில் மானுட வசந்தம் நிகழ்ச்சி நடந்தது. இதில் டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மது கலந்து கொண்டார்.
கடந்த 27ம் தேதி இந்திய கன்சுலேட் அரங்கில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு ஈமான் அமைப்பின் தலைவர் செய்யது எம். ஸலாஹுத்தீன் தலைமை வகித்தார். ஹாபிஸ் முஹம்மது இப்ராஹிம் இறைவசனங்களையும், அதன் தமிழ் மொழியாக்கத்தை ஈமான் விழாக்குழு செயலாளர் காயல் யஹ்யா முஹ்யித்தீன் வாசித்தார்.
ஈமான் அமைப்பின் துணைத்தலைவர்கள் எம்.அப்துல் கத்தீம், ஏ. அஹமது முஹைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஈமான் அமைப்பின் பொதுச் செயலாளர் குத்தாலம் ஏ.லியாக்கத் அலி வரவேற்புரை நிகழ்த்தினார்.
ஈமான் அமைப்பின் துணைத்தலைவர் எம்.அப்துல் ரஹ்மான் துவக்கவுரை நிகழ்த்தினார்.
அவர் பேசுகையில், நாம் பல்வேறு மதங்களைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் மனங்களால் ஒத்தவர்கள். இதனைப் புரிந்து கொண்டு நாம் அனைவரும் ஒரு குடும்பமாக இணைந்து செயல்பட இந்நிகழ்ச்சி பெரிதும் உதவும் என்ற நன்னோக்கில் துபாய் ஈமான் அமைப்பு இம்மானுட வசந்தம் நிகழ்ச்சியினை தங்களுக்கு வழங்குகிறது என்றார்.
ஈமான் அமைப்பின் கல்விக்குழுத்தலைவர் பி.எஸ்.எம்.ஹபிபுல்லாஹ், இந்து சமுதாயத்தின் பிரதிநிதியாக வெங்கடாச்சலம் ராமசாமி குருக்களும், கிறிஸ்தவ சமுதாயத்தின் சார்பாக அருட்தந்தை பால் ரிச்சர்ட் ஜோசப் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
வெங்கடாச்சலம் ராமசாமி குருக்கள் பேசுகையில், மனிதனால் கண்டறிய முடியாத ஒரு சூப்பர் பவர் சக்தி அதுவே கடவுள். உங்கள் வாழ்வில் வசந்தம் ஏற்பட இந்ந மானுட வசந்தம் நமக்கு உதவும் என்பதில் சந்தேகமில்லை என்றார்.
ஈமான் அமைப்பின் ஊடகத்துறை ஒருங்கிணைப்பாளர் முதுவை ஹிதாயத் நன்றி கூறினார்.