வறட்சி-களக்காட்டில் பரிதவிக்கும் வன விலங்குகள்
களக்காடு மலைப்பகுதியில் அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகும் வெயில் கொளுத்தி வருகிறது. சில நாட்களுக்கு முன்னதாக லேசான மழை பெய்ததோடு சரி. அதன் பின்னர் மழை வருவதற்கான எந்த அறிகுறியும் காணப்படவில்லை.
களக்காடு புலிகள் காப்பாகம் இருக்கும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளான தலையணை, தேங்காய் உருளி அணை, முதலிருப்பான், குளிராட்டி, செங்கல்தேரி, கோழிக்கால், கருங்கல்கசம் ஆகியவை நல்ல எழில் சூழ்ந்த இடங்கள். ஆனால், தற்போது நீர் இல்லாமல் இப்பகுதியில் இருந்த நீர்நிலைகள் வரண்டுவிட துவங்கியுள்ளன.
கேரளாவில் பருவ மழை தொடங்கும் போது இப்பகுதிகளிலும் மழை பெய்யும். இதனால் அருவி மற்றும் நீரோடைகளில் தண்ணீர்வரத்து அதிகரித்து சீசன் களை கட்டும்.
தற்போது மழை இல்லாததால் அணைகள் வறண்டு காணப்படுகிறது. பச்சையாற்றில் மட்டும் சிறிதளவு தண்ணீர் உள்ளது. அதுவும் சில நாட்களில் வற்றி விடும் என வனஅதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மலை உச்சியில் உள்ள செங்கல்தேரியில் எப்போதும் தண்ணீர் ஓடுவது வழக்கம். ஆனால் இந்தாண்டு அங்கேயும் தண்ணீர் வற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பல அணைகளில் தண்ணீர் குறைந்தளவே ஓடுகிறது. மொத்தத்தில் மலை பகுதிகளில் கடும் வறட்சி காணப்படுகிறது.
இது தொடர்ந்தால் வனவிலங்குகள் குடிநீர் தட்டுபாடு ஏற்பட்டு, ஊருக்குள் நுழையும் அபாயம் ஏற்படலாம் என்று சமூக ஆர்வலர்கள் கவலையுடன் கூறுகின்றனர்.