சென்னை மருத்துவமனையில் 4 மாத குழந்தைக்கு இருதய ஆபரேஷன்
சென்னை: நைஜீரியாவைச் சேர்ந்த நான்கு மாதமே ஆன பெண் குழந்தைக்கு இருதய அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டு புத்துயிர் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை அப்பல்லோ சிறுவர் மருத்துவமனையில் அந்தக் குழந்தையின் இதயத்தில், ஏவி குழாய் பழுது நீக்கும் அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நடந்துள்ளது.
அக்குழந்தையின் பெயர் ஓடினா கசுக்வு. நைஜீரியாவைச் சேர்ந்த அக்குழந்தையின் இதயத்தில் உள்ள ஏவி குழாயில் பழுது ஏற்பட்டு அடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து குழந்தையை சென்னைக்கு அழைத்து வந்தனர்.
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அக்குழந்தைக்கு உடனடியாக அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இதுகுறித்து குழந்தைகள் இருதய அறுவைச் சிகிச்சை நிபுணர் டாக்டர் நெவில் சாலமோன் கூறுகையில், இக்குழந்தைக்கு ஏவி குழாய் குறைபாடு என்ற பிரச்சினை இருந்தது.
இதயத்தில் இரண்டு வால்வுகளில் ஓட்டை ஏற்பட்டிருந்தது. இதுதவிர குழந்தைக்கு டவுன் சின்ட்ரோமும் இருந்தது. இதன் காரணமாக இக்குழந்தைக்கு அறுவைச் சிகிச்சை செய்வது மிகவும் கடினமானதாகவும், ரிஸ்க்கானதாகவும் இருந்தது என்றார்.
குழந்தைக்கு அறுவைச் சிகிச்சை செய்த அப்பல்லோ டாக்டர் முத்துக்குமரன் கூறுகையில், 2டி எக்கோ மற்றும் 3டி எக்கோ, கதிர்வீச்சு, ஆஞ்சியோகிராம் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி குழந்தையின் பிரச்சினையை அடையாளம் கண்டோம்.
பின்னர் அறுவைச் சிகிச்சை மூலம், குழந்தையின் இருதயத்தில் ஏற்பட்டிருந்த துளைகள் அடைக்கப்பட்டன. மேலும் ஏவி குழாய் அடைப்புகளும் சரி செய்யப்பட்டன என்றார்.
தமிழ்நாட்டில் 3டி எக்கோவை பயன்படுத்தி அறுவைச் சிகிச்சை செய்திருப்பது இதுவே முதல் முறையாகும் என்று அப்பல்லோ மருத்துவமனை கூறியுள்ளது.
1000 குழந்தைகளில் எட்டு குழந்தைகளுக்கு இந்த ஏவி குழாய் பிரச்சினை ஏற்படுகிறதாம்.
ஜூன் 13ம் தேதி நடந்த இந்த அறுவைச் சிகிச்சை நான்கு மணி நேரத்தில் முடிந்தது. அறுவைச் சிகிச்சை, பொது வார்டில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றால் இதற்கான செலவு ரூ. 1.5 லட்சமாகும். தனி வார்டில் சேர்க்கப்பட்டால் ரூ. 3 லட்சமாகுமாம்.
இந்த அறுவைச் சிகிச்சையை வெளிநாடுகளில் செய்தால் இதை விட பத்து மடங்கு செலவாகுமாம். ஆனால் இந்தியாவில் தரமான சிகிச்சைகள் குறைந்த செலவில் கிடைப்பதால் பல்வேறு வெளிநாட்டினர், குறிப்பாக ஆப்பிரிக்க நாட்டினர் இங்கு அதிகம் வருவதாக அப்பல்லோ தலைவர் டாக்டர் பிரதாப் சி ரெட்டி கூறியுள்ளார்.
தனது குழந்தைக்குப் புத்துயிர் அளித்த டாக்டர் பிரதாப் சி ரெட்டி மற்றும் டாக்டர்கள் குழுவினருக்கு நன்றி கூறிக் கொண்ட அந்தக் குழந்தையின் தாயார் அப்பல்லோ மருத்துவமனையின் கிளையை நைஜீரியாவில் தொடங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதற்குப் பதிலளித்த பிரதாப் சி ரெட்டி, லாவோஸில் அப்பல்லோவின் மருத்துவமனை விரைவில் அமையவுள்ளதாக தெரிவித்தார்.