துபாய்-முதுகுளத்தூர் பள்ளி பழைய மாணவர் சந்திப்பு

நிகழ்ச்சிக்கு பழைய மாணவர் சங்க நிர்வாகி இளங்கோவன் தலைமை வகித்தார். எம். காஜா நஜுமுத்தீன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
இளங்கோவன் தனது தலைமையுரையில் முதுகுளத்தூரைச் சேர்ந்த பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பல ஆண்டுகளுக்குப் பின்னர் அமீரகத்தில் சந்திப்பது மிகவும் மகிழ்வினையளிக்கிறது. பள்ளிக்கால நினைவுகள் தன்முன் நிழலாடுவதை உணர்ச்சிப்பூர்வமாக விவரித்தார்.
சிறப்பு விருந்தினராக பள்ளிவாசல் பள்ளிப் பணி நிறைவு பெற்ற ஆசிரியை அபரஞ்சி கலந்து கொண்டு சிறப்பித்தார். அவர் தனது பள்ளிக்கால நினைவுகளை எடுத்துரைத்தார். அவர் தனது வகுப்பில் பயின்ற மாணவர்களையும், அவர்களின் பிள்ளைகளையும் அமீரகத்தில் பல ஆண்டுகளுக்குப் பின்னர் சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்திய நிர்வாகிகளுக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்தார்.
ஆண்டுகள் பல ஆனாலும் தன் மீது மாறாத அன்பு கொண்டுள்ள மாணாக்கர்களை நன்றியுடன் நினைவு கூர்ந்தார். தான் படித்த பள்ளிக்கும், ஊருக்கும் பெருமை சேர்க்கும் வண்ணம் பணிசெய்யும் நாட்டிலும் திகழ்ந்திட வேண்டும் என்றார். ஆசிரியைக்கு நினைவுப் பரிசும், பொன்னாடை அணிவித்தும் கௌரவிக்கப்பட்டார்.
நிகழ்வில் ஹிதாயத்துல்லாஹ், ஜாஹிர் உசேன், குமார், ஜஹாங்கீர், ஹபீப் திவான், முஹம்மது, ஜமால், கனி, அஹ்மத் இம்தாதுல்லாஹ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.












Click it and Unblock the Notifications