பசுக்களை பாதுகாக்கக் கோரி 5 லட்சம் கிராமங்களில் யாத்திரை
இந்த அமைப்பின் தேசிய பொதுச் செயலாளர் திவாகர் சாஸ்திரி, தமிழக செயல் தலைவர் மாரிமுத்து, இந்து முன்னணி மாநில அமைப்பாளர் ராம.கோபாலன் ஆகியோர் நிருபர்களிடம் கூறுகையி்ல்,
பசு மாடுகளை பாதுகாக்க வேண்டும். பசுக்களை அடிப்படையாகக் கொண்ட, இயற்கை விவசாய முறைக்கு விவசாயிகள் திரும்ப வேண்டும். கிராமங்களில் விவசாயம் சார்ந்த தொழில்கள் தொடங்கப்பட வேண்டும். பசுவை தேசிய சின்னமாக அறிவிக்க வேண்டும். பசுவதை தடை செய்யப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் யாத்திரை நடைபெற உள்ளது.
இந்த யாத்திரை விஜயதசமி தினமான செப்டம்பர் 28ம் தேதி, ஹரியானா மாநிலம் குருஷேத்திரத்தில் தொடங்கும். அதே நாளில் இந்தியாவின் மற்ற பகுதிகளிலும் இந்த யாத்திரை தொடங்கும்.
இந்தியா முழுவதும் 108 நாட்கள், 5 லட்சம் கிராமங்களில் இந்த யாத்திரை நடைபெறும்.
குருஷேத்திரத்தில் தொடங்கும் யாத்திரை, நாடு முழுவதும் 20,000 கி.மீ. பயணம் மேற்கொண்டு, 17.1.2010ல் நாகபுரியில் முடிவடையும்.
மேலும் பசுவை பாதுகாக்க வலியுறுத்தி இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான மக்களிடம் கையெழுத்துகள் பெறப்பட்டு, குடியரசுத் தலைவரிடம் அளிக்கப்படும்.
தமிழகத்தைப் பொருத்தவரை 15,000 கிராமங்களில் பசு பாதுகாப்புக் குழு அமைக்கவும், அனைத்து மாவட்டங்களிலும் யாத்திரை நடத்தவும், 50 லட்சம் மக்களிடம் கையெழுத்துப் பெறவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றனர்.