குற்றாலத்தில் விஐபிக்களின் பெயரை கூறி மிரட்டினால் நடவடிக்கை - போலீஸ்
குற்றாலம்: குற்றாலத்தில் விஐபிக்களின் பெயர்களை கூறி அத்து மீறுபவர்கள் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
குற்றாலத்தில் காலதாமதமாக சீசன் தொடங்கியது. ஆனால் தற்போது எல்லா அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் குவிய தொடங்கியுள்ளனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் காரில் வருபவர்களில் சிலர் போக்குவரத்தை ஓழுங்குபடுத்தும் போலீசாரிடம் தகராறு செய்து காரை குறிப்பிட்ட இடத்தில் நிறுத்தாமலும், அருவிகளில் முறையாக குளிக்க செலலாமல் போலீசாரிடம் நீ யார். உன் நம்பரை சொல், தொப்பியை கழற்றாமல் விடமாட்டேன் என்று கூறி போலீசாரையே மிரட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த வாரம் பழைய குற்றாலம் அருவி பகுதியில் விஐபி பெயரை கூறி அத்துமீறி சென்ற கார் விபத்துக்குள்ளாகியதுடன் அதிலிருந்த 5 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
இதனால் குற்றாலம் வருகின்ற பயணிகள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டதை தொடர்ந்து போலீஸ் உயர் அதிகாரிகள் விஐபி பெயரை கூறி அத்துமீறி சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர்.
இதையடுத்து கடந்த 2 நாட்களாக விஐபிக்களின் பெயர்களை தவறாக பயன்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குடித்து விட்டு கார் ஓட்டுவது, அருவி பகுதியில் கலாட்டா செய்வது, பாதுகாப்பு போலீசாரிடம் தகராறு செய்வது, உட்பட சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இது போன்று ஐந்தருவியில் குடித்து விட்டு கலாட்டா செய்த மதுரையை சேர்ந்த வாலிபரை கைது செய்தனர். பயணிகள் மற்றும் பொதுமக்கள் போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு பெரிதும் பாராட்டு தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications