குதுப் மினாரில் ஒளி, ஒலி காட்சி-சுற்றுலா பயணிகளை கவர திட்டம்
டெல்லி: டெல்லியில் குதுப் மினாருக்கு அருகே ஒளி, ஒலி காட்சிக்கு ஏற்பாடு செய்து அதன்மூலம் சுற்றுலா பயணிகளை அதிகம் ஈர்க்க டெல்லி வளர்ச்சி ஆணையம் திட்டமிடப்பட்டுள்ளது.
தலைநகர் டெல்லியில் உள்ள மெக்ராலி பகுதியில் சுமார் 72.5 மீ உயரத்தில் இந்தியாவி்ன் பெருமை தாங்கி நிற்கும் கட்டிடம் குதுப் மினார். 12ம் நூற்றாண்டின் இறுதியில் குப்தின் ஐபெக் என்ற மன்னனால் கட்டப்பட்ட இந்த கட்டிடத்தை தினமும் சுமார் 10 ஆயிரம் சுற்றுலா பயணிகள் பார்க்கின்றனர்.
இந்நிலையில் அடுத்தாண்டு டெல்லியில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற இருக்கும் வேளையில் டெல்லியின் பொலிவை உயர்த்தி, சுற்றுலா பயணிகளை அதிக கவர டெல்லி வளர்ச்சி ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதற்காக டெல்லி வளர்ச்சி ஆணையம், இந்திய சுற்றுலா கழகத்துடன் கைகோர்த்து செயல்பட்டு வருகிறது.
இந்த இரு அமைப்புகளுக்கு இடையே செய்யப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி குதுப் மினார் அருகே ஒளி, ஒலி காட்சி அமைக்கப்பட இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் மூலம் இந்த வரலாற்று பாரம்பரிய சின்னத்தின் சிறப்பு குறித்து சுற்றுலா பயணிகளுக்கு விவரிக்கப்பட இருக்கிறது.
இதற்கான பணியில் ஈடுபட்டு வரும் அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த ஒளி, ஒலி காட்சி அமைக்கும் பணிகள் சுதந்திரமாக நடத்தப்பட இருக்கிறது. இது குதுப் மினாரை பாதுகாத்து வரும் இந்திய தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டுக்குள் வராது என்றார்.












Click it and Unblock the Notifications