ஸ்வைன் பீதி-பெங்களூரில் அதிகரிக்கும் ஹோம் டெலிவரி
பெங்களூர்: பெங்களூரில் ஹோட்டல்களில் இருந்து உணவு பொருட்களை ஹோம் டெலிவரிக்கு ஆர்டர் செய்யும் முறை அதிகரித்து வருகிறது. பன்றி காய்ச்சல் பீதி காரணமாக மக்கள், கூட்டமான இடங்களுக்கு செல்வதை தவிர்க்கும் முயற்சியாக இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
பன்றி காய்ச்சல் இந்தியாவில் வேகமாக பரவி வருவதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். அதுவும் வெளிநாட்டுக்கு மக்கள் அடிக்கடி சென்று வரும் பெங்களூர் போன்ற நகர மக்களிடம் இந்த பயம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது.
இதனால் இவர்கள் ஹோட்டல்கள், பப்கள் போன்றவற்றுக்கு போவதை கூடுமானவரை தவிர்த்து வருகின்றனர். அவர்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் புக் செய்து ஹோம் டெலிவரி மூலம் உணவுக்கு ஆர்டர் கொடுத்துவிடுகின்றனர்.
இது குறித்து ஹங்கிரிஜோன்.காம் என்ற பிரபல உணவு இணைய தளத்தின் துணை நிறுவனர் ரிதேஷ் திவேதி கூறுகையில்,
கடந்த இரண்டு வார காலமாக ஹோம் டெலிவரி செய்யும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை சுமார் 10 சதவீதத்துக்கு மேல் அதிகரித்துள்ளது. ஆனால், ஹோட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் குறையவில்லை.
மேலும், வணிக வளாகங்களில் உள்ள ரெஸ்டாரன்ட்களில் கூட்டம் நிரம்பி வழிகின்றன. மற்ற இடங்களில் உள்ள நடுத்தர ஹோட்டல்களில் சாப்பிட்டு வந்த மக்கள் தான் பன்றி காய்ச்சல் பரவலாம் என ஹோம் டெலிவரி செய்து வருகின்றனர் என்றார்.
வெட்ஹபா என்ற உணவு இணையதளத்தின் நிறுவனர் அஜய் என்பவர் கூறுகையில்,
பன்றி காய்ச்சல் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்போது ஹோம் டெலிவரி அதிகரித்துள்ளது. சில இடங்களில் ஹாஸ்டலில் தங்கியிருக்கும் தங்களது மகன்களுக்கு உணவை சப்ளை செய்யுமாறு சில பெற்றோர்களும் எங்கள் ஆர்டர் வழங்கி வருகின்றனர் என்றார்.