விநாயகர் சதுர்த்தி-சென்னையில் 700 சிலைகள் மட்டுமே வைக்க அனுமதி
சென்னை: விநாயகர் சதுர்த்தியையொட்டி சென்னை நகரில் 700 சிலைகள் மட்டுமே அனுமதிக்கப்படும் என மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. மேலும் சிலைகளைக் கரைக்கவும் புதிய இடங்களை அது அறிவித்துள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.
வரும் 23 ம் தேதி நாடு முழுவதும் விநாயகர் சதூர்த்தி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி சென்னையில் 700 விநாயகர் சிலைகளை மட்டும் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதித்துள்ளது.
அதேசமயம், அதிகபட்சமாக 11 அடி உயரத்திலான சிலைகளை மட்டுமே அனுமதிக்கலாம். அதற்கு மேல் வைக்க அனுமதி கிடையாது.
ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள வழித்தடங்களில் மட்டுமே ஊர்வலங்களை நடத்திக்கொள்ளலாம். ஊர்வலங்களின் பாதுகாப்பிற்காக 8 ஆயிரம் போலீசார் ஒதுக்கப்படுவார்கள் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.
8000 போலீஸார் பாதுகாப்பு...
சென்னை நகரில் விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது 8000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர்.
இதுகுறித்து மாநகர காவல்துறை ஆணையர் ராஜேந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், 800 இடங்களில் பிள்ளையார் சிலை வைக்க போலீசார் அனுமதி வழங்கியிருக்கிறார்கள். அதிபட்சமாக 11 அடி உயர பிள்ளையார் சிலை வைக்கப்படுகிறது. பிள்ளையார் சிலைகள் வைக்கப்படும் பகுதிகளில் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுவார்கள்.
விநாயகர் சதுர்த்தி முடிந்ததும் வரும் 29, 30 ஆகிய தேதிகளில் பிள்ளையார் சிலைகளை கரைக்க ஊர்வலமாக எடுத்துச்செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்ட பாதையிலேயே ஊர்வலகங்கள் செல்ல அனுமதிக்கப்படும்.
விநாயகர் சிலை ஊர்வலம் அமைதியாக நடைபெற தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
5 இணைக்கமிஷனர்கள், துணைக் கமிஷனர்கள், 47 உதவிக் கமிஷனர்கள் தலைமையில் 8 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்றார் அவர்.
6 இடங்களில் சிலைகளைக் கரைக்கலாம்...
விநாயகர் சிலைகளைக் கரைக்க 6 இடங்களை தமிழக அரசு அனுமதித்துள்ளது.
சென்னை நகர விநாயகர் சிலைகளை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரை, காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகில், திருவொற்றியூர் பாப்புலர் எடை மேம்பாலம் பின்புறம், யுனிவர்சல் கார்பொரண்டம் பின்புறம், நீலாங்கரை பல்கலை நகர் ஆகிய ஐந்து இடங்களில் கரைக்கலாம்.
புறநகர்ப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள், எண்ணூர் ராமகிருஷ்ணா நகர் கடற்கரைப் பகுதியில் கரைக்க அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி தெரிவித்துள்ளார்.
புறக்கணித்த இந்து முன்னணி...
இதற்கிடையே, விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நாகர்கோயில் கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் ராஜேந்திர ரத்னு கூட்டிய கூட்டத்தை அங்குள்ள இந்து அமைப்புகள் புறக்கணித்தன.
அந்த கூட்டத்திற்கு கிறிஸ்தவ மற்றும் முஸ்லீம் பிரதிநிதிகளையும் கலெக்டர் அழைத்திருந்ததால், எங்கள் மத விழா சம்பந்தமாக கூட்டிய கூட்டத்திற்கு இவர்களை ஏன் அழைத்தீர்கள் என்று எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி,ஆர்.எஸ்.எஸ்., இந்து மகா சபை, இந்து மக்கள் கட்சி, மற்றும் பா.ஜ.க.,பிரதிநிதிகள் கூட்டத்தை புறக்கணித்தனர்.












Click it and Unblock the Notifications