ஒரிசா-கல்லூரிக்கு போகும் 70 வயது முன்னாள் காங். எம்.பி.
புவனேஸ்வர்: 70 வயதில் பேரன், பேத்திகளுடன் விளையாடி மகிழ நினைப்பவர்களின் மத்தியில் ஒரிசா மாநிலத்தை சேர்ந்த முன்னாள் எம்.பி. ஒருவர் கல்லூரியில் சேர்ந்துள்ளார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பபாக பேசப்பட்டு வருகிறது.
ஒரிசா மாநிலத்தை சேர்ந்த முன்னாள் காங்கிரஸ் எம்.பி. நாராயணன் சாகு. 1971 மற்றும் 1974ல் பாலாஹரா தொகுதி எம்எல்ஏவாகவும், 1980ல் தியோகார் எம்.பி.யாகவும் இருந்த இவர் 1985ல் அரசியலில் இருந்து விலகிவிட்டார்.
1963ல் ஒரிசாவில் ராவன்ஷா கல்லூரியில் இளங்கலை படிப்பை முடித்த அவர் தனது 70வது வயதில் மீண்டும் கல்லூரியில் சென்று எம்.ஏ. தத்துவம் படிக்க விரும்பினார். இதையடுத்து உத்கல் பல்கலைக்கழகத்தில் விண்ணப்பித்த அவர் தற்போது கல்லூரியில் சேர்ந்து படித்து வருகிறார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
இது எனது வாழ்க்கையின் இரண்டாவது கட்டம். வாழ்க்கையில் பலவற்றை சாதித்துவிட்டேன். அரசியல், வர்த்தகம் என பல துறைகளில் அனுபவம் பெற்றுள்ளேன். தற்போது எனக்கு எந்த கவலையும் இல்லை.
இதனால் இளம் வயதில் என்னால் செய்ய முடியாமல் விட்டுபோன சிலவற்றை செய்ய முயற்சித்து வருகிறேன். கல்லூரியில் படிக்காமல் எனக்கு இந்த பாடத்தில் நல்ல அறிவு இருக்கிறது. ஆனால், கல்லூரியில் படிப்பத ஒரு வித்தியாசமான அனுபவம். இது இளமை பருவத்துக்கு என்னை மீண்டும் அழைத்து செல்லும்.
விடுதியில் தங்க போகிறேன்...
விடுதியில் தங்கி படிக்கலாம் என நினைக்கிறேன். இதனால் எனக்கு மேலும் சில நண்பர்கள் கிடைப்பார்கள். எல்லாருக்கும் எனது பேரக்குழந்தைகளின் வயது இருக்கும் என்றாலும் அவர்களுடன் தங்குவதில் எந்த சிக்கலும் வராது என்றார் அவர்.
மாணவரின் தந்தை என நினைத்தேன்...
இது குறித்து கல்லூரியின் தத்துவதுறையின் தலைவர் ரமேஷ் சந்திர தாஸ் கூறுகையில்,
நான் வகுப்பறையில் முதன் முதலாக அவரை பார்த்த போது, ஏதோ ஒரு மாணவரின் தந்தை தான் வந்துள்ளார் என நினைத்தேன். ஆனால், அதன் பின்னர் தான் அவர் ஒரு மாணவர் என்பது தெரிவிக்கப்பட்டது. அவரது முயற்சி பல இளைஞர்களுக்கு ஊக்கம் கொடுப்பதாக இருக்கும் என்றார்.
எஸ்பி பட்நாயக் என்ற மாணவர் கூறுகையில், எங்களுடன் ஒரு முதியவர் இருப்பது ஆரம்பத்தில் எங்களுக்கு கொஞ்சம் சங்கோஜத்தை ஏற்படுத்தியது. ஆனால் அவர் எங்களுடன் நட்புடன் பழகி வருவதால் தற்போது எந்த சிக்கலும் இல்லை என்றார்.