ஊட்டி ரயிலுக்கு திருச்சி நீராவி என்ஜின்-ரூ. 40 கோடி ஒதுக்கீடு
ஊட்டி மலை ரயிலுக்கு என்ஜின் தயாரித்து கொடுக்கவிருந்த சுவிட்சர்லாந்து நிறுவனம் பொருளாதார நெருக்கடியால் இழுத்து மூடப்பட்டது. இதையடுத்து மலை ரயிலுக்கு புதிய என்ஜின் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. தற்போது அந்த சிக்கலுக்கு இதன்மூலம தீர்வு கிடைத்துள்ளது.
இந்தியாவின் பழமையான மலை ரயில்களில் ஊட்டி ரயிலும் ஒன்றும். ஆங்கிலேயர் காலத்தில் 1845ம் ஆண்டு துவக்கப்பட்ட இந்த பணிகள் நிறைவடைந்து 1889ல் முதல் முறையாக இப்பகுதியில் ரயில் ஓடும் சத்தம் கேட்டது.
இந்நிலையில் கடந்த 2005ம் ஆண்டு இந்த ரயில் யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டது. தற்போது இந்த ரயில் குறித்து ஏற்பட்ட விழிப்புணர்ச்சி காரணமாக ஏராளமான பயணிகள், ரயில் மூலம் ஊட்டி செல்ல விரும்புகின்றனர். இதனால் இந்த ரயிலுக்கு நல்ல மவுசு ஏற்பட்டுள்ளது.
ஆனால், இந்த ரயிலின் நிலைமை தொடர்ந்து மோசமானதாக இருக்கிறது. பல சமயங்களில் பாதி வழிகளிலே நின்று விடுகிறது. இதனால் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். நடுக்காட்டில் திக்கு தெரியாமல் தவிக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
இந்த ரயிலின் மோசமான நிலைக்கு வாழ்நாள் முடிந்து பல ஆண்டுகள் ஆகிவிட்ட என்ஜின்களை பயன்படுத்துவது தான் காரணம் என கூறப்பட்டது.
இதையடுத்து ரயில்வே அமைச்சகம் நிலக்கரி மூலம் இயங்கும் என்ஜினை தயாரிக்கும் நிறுவனம் எங்கு இருக்கிறது என உலகம் முழுவதும் தேடியது. அப்போது சுவிட்சர்லாந்தில் உள்ள நிறுவனம் மட்டும் தான் இதை தயாரிப்பது தெரிய வந்தது. அவர்களிடம் நான்கு புதிய என்ஜின் வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் போட்டது. இதனால் மலை ரயில் விரைவில் புது பொலிவுடன் செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் அந்த சுவிட்சர்லாந்து நிறுவனம் உலக பொருளாதார நெருக்கடி காரணமாக மூடப்பட்டுவிட்டு, ஊட்டி மலை ரயில் பிரியர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதையடுத்து மலை ரயிலுக்கு புதிய நிலக்கரி என்ஜின் வாங்கும் எண்ணம் நிறைவேறாமல் போனது.
தற்போதுள்ள என்ஜின் மூலம் இயக்கினால் கூடுதல் நிலக்கரி தேவை காரணமாக ஆண்டுக்கு ரூ. 24 கோடி வரை ரயில்வேக்கு நஷ்டம் ஏற்படும். இதற்கு பதிலாக டீசல் அல்லது நீராவி என்ஜின் அல்லது இந்த பகுதியை மின்சார மயமாக்குவது சிறந்தது என ரயில்வே துறை அதிகாரிகள் சிலர் தெரிவித்துள்ளனர்.
ரூ. 40 கோடி அனுமதி...
இதையடுத்து இந்த மலை ரயிலுக்கு ரூ. 40 கோடி செலவில் நான்கு புதிய நீராவி என்ஜின்களை வழங்க ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. தற்போது இந்த நீராவி என்ஜின்கள் திருச்சி பொன்மலையில் உள்ள ரயில்வே பணிமனையில் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இந் நிலையில் ஊட்டி மலை ரயில் பாதையை சீரமைக்க கடந்த 2004-05ல் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதற்கு ரயில்வே துறை ரூ. 11 கோடி ஒதுக்கியுள்ளது.
இந்த தொகையின் மூலம் கல்லாறு முதல் குன்னூர் வரை உள்ள தண்டவாளம் ரூ. 5 கோடி செலவில் மாற்றப்பட இருக்கின்றன. பல் சக்கர ரயில் பாதை உயர்த்த தரத்தில் அமைக்கப்பட இருக்கிறது. கடந்த ஜூலை மாதத்தில் துவக்கப்பட்ட இந்த மறு சீரமைப்பு பணிகளை அடுத்த ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.