அக்டோபர் 6 - 12: தகவல் பெறும் உரிமைச் சட்ட வாரம்
மதுரை: அக்டோபர் 6 ம் தேதி முதல் 12 ம் தேதி வரை தகவல் பெறும் உரிமைச் சட்ட வார விழாவாக கடைப்பிடிக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
அரசு அலுவலகங்களின் நடவடிக்கைகள், ஊழியர்களின் செயல்பாடுகள், மக்களுக்குத் தேவையான பல பயனுள்ள தகவல்கள் உள்ளிட்ட பல்வேறு விவரங்களையும் அதிகாரப்பூர்வமாகத் தெரிந்து கொள்ள தகவல் பெறும் உரிமைச் சட்டம் பொது மக்களுக்கு மிகவும் உதவியாக உள்ளது.
பொது மக்களுக்கு மிகவும் இன்றியமையாத இந்த சட்டம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு, அக்டோபர் 12 ம் தேதி அமலுக்கு வந்தது. இதனால், தகவல் பெறும் உரிமைச் சட்ட வார விழாவைக் கடைப்பிடிக்க மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது. இது குறித்து அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் எழுதியது.
அதில், தகவல் பெறும் உரிமைச் சட்ட வார விழாவை அக்டோபர் 6 ம் தேதி முதல் 12 ம் தேதி வரை கடைப்பிடிக்க வேண்டும். அந்தச் சட்டம் தொடர்பாக, பயிலரங்குகள், கருத்தரங்கங்கள், விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
இதனையடுத்து, அக்டோபர் 6-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை, தமிழகத்தில் தகவல் பெறும் உரிமைச் சட்ட வார விழா கடைப்பிடிக்க வேண்டும் என தமிழக அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.