பொது இடத்தில் 'தம்' - ஒரே ஆண்டில் ரூ. 12 லட்சம் அபராதம் வசூல்
டெல்லி: பொது இடங்களில் புகை பிடிக்க விதிக்கப்பட்ட பின்னர் கடந்த ஒரு ஆண்டு காலத்தில் தமிழகத்தில் தான் அதிகபட்சமாக ரூ. 12 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் 2ம் தேசப்பிதா காந்தி பிறந்த நாளன்று நாடு முழுவதும் பொது இடங்களில் புகை பிடிக்க அப்போதைய சுகாதார துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் தடை கொண்டு வந்தார்.
இந்நிலையி்ல் சமீபத்தில் இந்திய சுகாதார சங்கம் என்ற தன்னார்வ நிறுவனம் தகவல் பெறும் உரிமை சட்டம் மூலம் புகை பிடிக்க தடை விதிக்கப்பட்டது குறித்து தகவல்களை கேட்டார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் மத்திய சுகாதாரதுறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடந்த அக்டோபர் 2, 2008 முதல் இந்த ஆண்டு செப்டம்பர் பாதி வரையில் டெல்லியில் 46 ஆயிரத்து 531 பேரிடம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. பொது இடங்களில் புகை பிடிப்பவர்களுக்கு தலா ரூ. 200 வசூல் செய்யப்படுகிறது.
நாட்டிலே டெல்லியில் தான் அதிகம் பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டிருந்தாலும், அபராத தொகை வசூலில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது. இங்கு 10 ஆயிரத்து 979 பேரிடம் சுமார் ரூ. 12.6 லட்சம் அபராத தொகை கிடைத்துள்ளது.
டெல்லியில் தனி நபர்களிடமும், சென்னையில் நிறுவனங்களிலும் அதிக அளவில் அபராதம் விதிக்கப்பட்டிருக்கலாம். இதனால் தான் வருமானத்தில் வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
ஆந்திராவில் ரூ. 1.4 லட்சமும், கர்நாடகாவில் 2500 பேரிடம் ரூ. 1.15 லட்சமும் வசூலிக்கப்பட்டுள்ளது. மிசோரத்தில் 1200, கேரளாவில் 1,173 மற்றும் கோவாவில் 250 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கண்டுகொள்ளாத ராஜஸ்தான்...
ஆனால், ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த சட்டத்தை யாரும் ஒரு பொருட்டாக மதிப்பதில்லை என்பது தெரியவந்துள்ளது. அங்கு மாதத்துக்கு ஒருவர் மீது கூட அபராதம் விதிக்கப்படவில்லை. ஒரு ஆண்டில் வெறும் 9 பேருக்கு மட்டும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தில் 21 பேருக்கு அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications