நோபல் வென்ற தமிழர்களிடையே நிலவும் ஒரு ஒற்றுமை

இவர்கள் மூவருக்கும் சில ஒற்றுமைகள் இருப்பது கூர்ந்து பார்த்தால் புலனாகும். 1930ல் இயற்பியலுக்காக நோபல் பரிசு வென்ற சிவி ராமனும், 1983ல் நோபல் வென்ற சுப்ரமணியன் சந்திரசேகரும் உறவினர்கள். சிவி ராமனின் மருமகன் தான் சந்திரசேகரன்.
இவர்கள் இருவரும் சென்னை பிரசிடென்ஸி கல்லூரியில் பட்டம் பயின்றவர்கள்.
தற்போது வேதியலுக்கு நோபல் பரிசு வென்றுள்ள வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனுக்கு இவர்களுக்கு உறவு வகையில் ஒற்றுமையில்லாவிட்டாலும், இவரது பெயரில் உள்ள வெங்கட்ராமன்தான், சர். சி.வி. ராமனின் முழுப் பெயராகும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல சர்.சி.வி.ராமனின் பெயரில் உள்ள சந்திரசேகர்தான், சுப்ரமணியம் சந்திரசேகரின் பெயரிலும் உள்ளது.
மூவரின் தாய்மொழியும் தமிழ் தான். மூன்று பேரின் குடும்பமும் விஞ்ஞான ஆராய்ச்சிகளில் அதிகம் நாட்டம் கொண்டதாகும். மேலும், மூன்று பேருமே அறிவியல் பிரிவில் நோபல் பரிசு வென்றுள்ளனர்.
சி.வி.ராமனும், சந்திரசேகரும் இயற்பியலுக்காக வென்றனர். வெங்கி ராமகிருஷ்ணன் வேதியியலுக்காக வென்றுள்ளார்.
முதல் ஆசியர் சிவி ராமன்...
சந்திரசேகர வெங்கட்ராமன் எனப்படும் சிவி ராமனுக்கு 1930ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவர் அறிவியலுக்கான நோபல் பரிசு வென்ற முதல் ஆசியர் மற்றும் முதல் வெள்ளையர் அல்லாத இனத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நீரில் நிறப்பிரிகை குறித்து விளக்கிய இவரது ராமன் விளைவுக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. தனக்கு நோபல் பரிசு கிடைக்கும் என்பதில் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்த சிவி ராமன், 1930 நவம்பரில் அறிவிப்பு வெளியாவதற்கு 4 மாதங்களுக்கு முன்னதாகவே ஜூலையிலேயே தனது பயணத்துக்கான டிக்கெட்டை புக் செய்திருந்தார்.
திருச்சியில் 1888ல் பிறந்த சிவி ராமன் 1904ல் சென்னை பிரசிடென்ஸி கல்லூரியில் பி.எஸ்சி இயற்பியலில் தங்கப் பதக்கம் வென்றவர்.
சந்திரசேகர் லிமிட்...
சுப்ரமணியம் சந்திரசேகர் அன்றைய ஒருங்கிணைந்த இந்தியாவில் இருந்த லாகூரில் 1910ல் பிறந்தவர். அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழத்தில் பேராசிரியராக பணியாற்றியவர்.
சூரியனின் எடையை விட 1.44 மடங்கு அதிக எடை கொண்ட நட்சத்திரங்கள் அழிந்துவிடும். அவை நியூட்ரான் நட்சத்திரம் அல்லது கரும் துளைகளாகிவிடும் (Black Hole) என்பதைக் கண்டறி்நதவர் சந்திரசேகர். இந்த கண்டுபிடிப்பு சந்திரசேகர் லிமிட் என்றழைக்கப்படுகிறது. இதற்காக அவருக்கு 1983ல் நோபல் பரிசு வழங்கப்பட்டது.
ரிபோசோம் ஆராய்ச்சி...
தற்போது நோபல் பரிசு வென்றுள்ள வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் 1952ல் சிதம்பரத்தில் பிறந்தவர். கேம்பிரிட்ஜ் டிரினிட்டி கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். ரிபோசோம் குறித்த ஆராய்ச்சிக்கு அவருக்கு நோபல் பரிசு கொடுக்கப்பட்டுள்ளது.
மூன்று முத்தான தமிழர்கள் 100 ஆண்டுகளுக்குள் மூன்று நோபல் பரிசுகளை பெற்றுக் கொடுத்து தமிழர்களுக்கும், இந்தியர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்தது. அதேபோல இந்தியாவிலேயே அதிக அளவில் நோபல் பரிசினை வென்றவர்கள் தமிழர்கள்தான் என்ற புதிய பெருமையும் இதன் மூலம் சேர்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications