பட்டாசு வாங்கி காசை கரியாக்காதீர்கள்:ஏழைகளுக்கு உதவுங்கள்-கடலூர் கலெக்டர்!
கடலூர்: மக்கள் வெடிகளுக்கு செலவிடும் பணத்தை ஏழை, எளியவர்களுக்கு கொடுத்து உதவுமாறும் கடலூர் மாவட்ட கலெக்டர் சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை அதிக ஒலி எழுப்பும் பட்டாசு வகைகளை வெடிக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்து உள்ளது.
125 டெசிபல் ஒலி அளவுக்கு மேல் ஒலிஎழுப்பும் வெடிகள் செவிகளைச் சேதப்படுத்தும். மேலும் தீபாவளி நாளன்று வாணவேடிக்கை மற்றும் பட்டாசுகளைக் கொளுத்தும் பொதுமக்கள், அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க வேண்டாம். இது குழந்தைகள் மற்றும் வயதானோருக்கு சுகாதாரக் கேடு மற்றும் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும்.
பட்டாசுகளை வெடிக்கும் போது அவற்றில் இருந்து வெளிவரும் ரசாயனங்கள், சுற்றுச் சூழலை மாசுபடுத்துகிறது. இதனால் கண் எரிச்சல், சுவாசக் கோளாறு, நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படுகின்றன.
எனவே, வெடிகளுக்குச் செலவிடும் பணத்தை ஏழைக் குழந்தைகளுக்கு பாடப் புத்தகங்கள், ஆடைகள் வாங்க உதவினால் நல்ல பலன் தரும்.
தீபாவளிப் பண்டிகையை ஒலிமாசு ஏற்படுத்தும் பட்டாசுகளைத் தவிர்த்து, வண்ணமிகு ஒளிதரும் பட்டாசுகளை குறைந்த அளவில் உபயோகித்து வழக்கமான உற்சாகத்துடன் ஒலிமாசற்ற பண்டிகையாக கொண்டாடி சுற்றுச் சூழலைக் பாதுகாப்போம் என்றார்.












Click it and Unblock the Notifications