இஸ்ரோவின் அடுத்த தலைவர் கே.ராதாகிருஷ்ணன்
கே.ராதாகிருஷ்ணன் தற்போது திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குநராக உள்ளார்.
சனிக்கிழமை மாலை குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் ராதாகிருஷ்ணன் வழிபாட்டில் இருந்தபோது கோவிலுக்கு அவரது நியமனக் கடிதம் பேக்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
தனது நியமனம் குறித்து ராதாகிருஷ்ணன் கூறுகையில், போன் மூலம் எனக்குத் தகவல் வந்தது. அப்போது நான் கோவிலில் இருப்பதாக தெரிவித்தேன். இதையடுத்து எனது நியமனக் கடிதத்தை கோவில் பேக்ஸ் எண்ணுக்கு பேக்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.
அறிவியலும், ஆன்மீகமும் கை கோர்த்துச் சென்றது அழகு. இரண்டும் இணையும்போது அது மிகவும் ரசிப்புக்குரியதாகிறது என்றார்.
அக்டோபர் 31ம் தேதி தற்போதைய தலைவர் மாதவன் நாயர் ஓய்வு பெறுகிறார். அன்றே தனது புதிய பொறுபபை ஏற்றுக் கொள்கிறார் ராதாகிருஷ்ணன்.
1970ம் ஆண்டு கேரளா பல்கலைக்கழத்தில் மின் பொறியியல் பட்டப்படிப்பை முடித்தார் ராதாகிருஷ்ணன். பின்னர் பெங்களூர் ஐஐஎம்மில் எம்.பி.ஏ முடித்தார். ஐஐடி காரக்பூரில் பி.எச்.டி முடித்தார்.
இஸ்ரோவில் ஏவியானிக்ஸ் என்ஜீனியராக 1971ம் ஆண்டு பணியில் சேர்ந்தார். இஸ்ரோவில் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார்.
சந்திரயான் -1 திட்டத்திலும் முக்கியப் பங்கு வகித்துள்ளார் ராதாகிருஷ்ணன்.