சபரிமலை: நவம்பர் 16ம் தேதியே மாலை அணியலாம்-தந்திரி
நாகர்கோவில்: சபரிமலை ஐயப்பன் கோவிலில் கார்த்திகை ஒன்றாம் தேதி மண்டல கால பூஜைகள் தொடங்குகிறது.
அன்று முதல் 41 நாட்கள் நடக்கும் பூஜை ஒரு மண்டல காலம் எனப்படும். 41வது நாளில் மண்டல பூஜை நடக்கும், கார்த்திகை 1ம் தேதி மாலை அணிந்தால் 41 நாள் விரதம் சரியாக வரும்.
ஆனால், இந்தாண்டு கார்த்திகை 1ம் தேதி தமிழக பஞ்சாங்களில் நவம்பர் 17ம் தேதியும், மலையாள பஞ்சாங்கங்களில் 16ம் தேதியும பிறப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளதால் சிறு குழப்பம் ஏற்பட்டுள்ளது.
கேரள பஞ்சாங்க அடிப்படையில் மண்டல கால பூஜைக்காக 15ம் தேதி மாலையே சபரிமலை நடை திறக்கப்பட்டு 16ம் தேதி முதல் மண்டல பூஜை தொடங்குகிறது.
தமிழக பஞ்சாங்கபடி கார்த்திகை 17ம் தேதி மாலை அணிந்தால் 40 நாட்கள்தான் விரதம் இருக்க முடியும். குறிப்பாக முதன் முதலாக மாலையும் அணியும் பக்தர்களுக்கு இது தர்ம சங்கடமாக இருக்கும்.
எனவே மண்டல பூஜையில் முறைப்படி விரதம் இருந்து கலந்து கொள்ள விரும்பும் பக்தர்கள் நவம்பர் 16ம் தேதியே மாலை அணிந்தாக வேண்டும்.
இதுகுறித்து சபரிமலை தந்திரி கண்டாரு ராஜீவரு கூறுகையில்,
தமிழக, கேரள பஞ்சாங்கங்களில் ஒருநாள் வித்தியாசப்படுவது வழக்கம்தான். மண்டல கால பூஜை விரதம் என்பது 41 நாட்கள் மேற்கொள்ள வேண்டும். நவம்பர் 16ம் தேதி கேரளாவில் கார்த்திகை ஓன்று. எனவே சபரிமலை மண்டல காலத்தை கணக்கில கொள்பவர்கள் 16ம் தேதியே மாலை அணிந்து கொள்ள வேண்டும.
எனினும் தமிழக கோயில்களில் ஆச்சாரப்படி மண்டல கால விரதத்திற்காக 17ம் தேதி மாலை அணிவதில் தவறு ஒன்றும் இல்லை. அதுபோல சபரிமலை உள்பட கேரளாவின் அனைத்து கோயில்களிலும மண்டல பூஜை வழக்கான டிசம்பர் 27ம் தேதிக்கு பதிலாக 26ம் தேதியே நடந்து விடும்.
27ம் தேதி நடை அடைக்கப்பட்டு விடும். ஒருநாள் விடுபடுகிறது என்தற்காக பக்தர்கள் குழபபம் அடைய வேண்டியதில்லை. தங்கள் விருப்பப்படி இந்த விரதத்தை மேற்கொள்ளலாம் என்றார்.