831 நடுநிலை பள்ளிகளில் 100 கோடியில் புது கட்டிடங்கள்
நாகர்கோவில்: தமிழகம் முழுவதும் தரம் உயர்த்தப்பட்ட 831 அரசு நடுநிலைப் பள்ளிகளுக்கு ரூ. 100 கோடியில் புதிய கட்டடங்கள் கட்டப்படுகிறது என்று அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குனர் வெங்கடேசன் தெரிவித்தார்.
குமரி மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளில் அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குனர் வெங்கடேசன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி இயக்க திட்டம் மிகச் சிறப்பாக செயல்படுகிறது. செயல் வழி கற்றல், படைப்பாற்றல் கல்வி முறைகளை வலுவூட்டும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். இதற்காக ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.
மாணவர்களின் ஆங்கில அறிவை மேம்படுத்துவதற்கு ஆசிரியர்களுக்கு பிரிட்டிஷ் கவுன்சில் மூலம் ஆங்கில பயிற்சி அளிக்கப்படுகிறது. நடப்பாண்டு ரூ.863 கோடி பட்ஜெட்டில் அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இந்த ஆண்டில் 831 தொடக்க பள்ளிகள் நடுநிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இப்பள்ளிகளில் 3 வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. இதற்கும் புதிய பள்ளிகளுக்கு கட்டிடங்கள் கட்டுவதற்கும் ரூ.100 கோடி ஓதுக்கப்படுகிறது.
மாவட்டத்துக்கு 2 வீதம் 60 கணிணி மையங்கள் அமைக்கப்படுகிறது. இவற்றின் மூலம் 50 ஆயிரம் ஆசிரியர்களுக்கு 10 நாள் கணிணி பயிற்சி அளிக்கப்படுகிறது. மாநிலம் முழுவதும் 37, 456 பள்ளிகளில் செய்லவழி கற்றல் நடைமுறையில் உள்ளது.
இவற்றிற்காக 45 ஆயிரம் செயல் வழி கற்றல் அட்டைகள் தயாரிக்கப்படுகிறது. 4 வகுப்புகள் உள்ள பள்ளிகளுக்கு கூடுதல் கற்றல் அட்டைகள் வழங்கப்படும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications