இடிந்த பெர்லின் சுவர்..இணைந்த இதயங்கள்..!
கிழக்கு ஜெர்மனி என்றும் மேற்கு ஜெர்மனி என்றும் முன்பு ஜெர்மனி பிரிந்து கிடந்தது. பெர்லின் நகருக்கு நடுவேயும் அதைப் பிரித்து பிரமாண்ட சுவரும் எழுப்பபட்டிருந்தது.
இந்த நிலையில் 20 ஆண்டுகளுக்கு முன்பு, 1989ம் ஆண்டு நவம்பர் 9ம் தேதி பெர்லின் சுவர் இடிக்கப்பட்டது. ஐரோப்பிய நாடுகளில் பரவிய புரட்சி கிழக்கு ஜெர்மனி அரசையும் நெருக்கடியில் தள்ளியது.
இதையடுத்து கிழக்கு ஜெர்மனியில் இருப்பவர்கள் மேற்கு ஜெர்மனிக்கும், மேற்கில் இருப்பவர்கள் கிழக்குக்கும் வரலாம் என கிழக்கு ஜெர்மனி அரசு அறிவித்தது.
இதையடுத்து பெர்லின் நகரின் இரு பகுதிகளிலும் வசித்த மக்கள் அலைகடலென திரண்டு வந்து சுவரின் ஒரு பகுதியை இடித்து மறு பகுதிக்குச் சென்று கொண்டாடினர். அதன் பின்னர் சுவர் முழுமையாக இடிக்கப்பட்டது.
அந்த நாளின் 20வது ஆண்டு தினம் பெர்லினில் நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. பல்வேறு நாட்டுத் தலைவர்கள் உள்ளிட்ட 1 லட்சம் பேர் இதில் கலந்து கொண்டனர்.
ஜெர்மனியின் மறு இணைப்புக்கு அடையாளமாக விளங்கும் பிரன்டன்பர்க் கேட் முன்பு இதுதொடர்பான நிகழ்ச்சி நடந்தது.
ஜெர்மன் சான்சலர் ஏஞ்செலா மெர்கல் இந்த கேட் முன்பு நின்றபடி உலகத் தலைவர்களை வரவேற்றார். இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரவுன், பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோஸி, ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெத்வதேவ், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.
இவர்கள் தவிர முன்னாள் சோவியத் அதிபர் மிகயீல் கார்பசேவ், முன்னாள் போலந்து அதிபர் லே வலேசா ஆகியோரும் நிழ்ச்சியில் கலந்து கண்டனர்.
கிழக்கு ஜெர்மனியில் மக்கள் புரட்சி தீவிரமடைய இந்த இரு தலைவர்களும் முக்கியக் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
சுவரின் கதை...
1961ம் ஆண்டு கிழக்கு ஜெர்மனி அரசு, 155 கிலோமீட்டர் தூரத்திற்கு இந்த சுவரை கட்டியது. இதன் மூலம் ஜெர்மனிக்கும், பெர்லினுக்கும் இடையே இரும்புத் திரை போட்டு மூடப்பட்டது.
கிழக்கு ஜெர்மனியிலிருந்து பெருமளவிலான மக்கள் மேற்கு ஜெர்மனிக்குத் தப்பிப் போவதை தடுப்பதற்காக இந்த சுவரை கிழக்கு ஜெர்மனி அரசு கட்டியது.
இந்த சுவர் கட்டப்பட்ட பின்னரும் கூட பலர் தப்பிப் போக முயன்றனர். ஆனால் அப்படித் தப்பிச் செல்ல முயன்று, கிழக்கு ஜெர்மனி படையினரால் 136 கிழக்கு ஜெர்மானியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.