மகாத்மா காந்தி பெயரில் ஆந்திராவில் போலி ரேஷன் கார்டு
அந்த போலி ரேஷன் கார்டில் பெயர் எம்.கே.காந்தி தாத்தா, வயது 65, முகவரி 46541, காந்தி தெரு, காந்தி சாலை, சித்தூர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் கொடுமை என்னவென்றால் காந்தி தாத்தாவின் தந்தை பெயர் நாதுராம் கோட்சே என கூறப்பட்டுள்ளது. மகாத்மாவைக் கொன்றவர்தான் கோட்சே என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் Godse என்பதற்குப் பதில் Godsay என அவரது பெயர் இடம் பெற்றுள்ளது.
சித்தூர் மாவட்டம் ராமச்சந்தராபுரம் மண்டலம், சுட்டகுந்தா கிராமத்தில் இந்த கார்டு விநியோகிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விசாரணை நடத்த 3 பேர் கொண்ட கமிட்டியை மாவட்ட ஆட்சித் தலைவர் சேஷாத்ரி நியமித்துள்ளார். இந்த கார்டை விநியோகித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இது மட்டுமல்லாமல் ஏகப்பட்ட கோல்மால் பெயர்களில் போலி ரேஷன் கார்டுகள் ஆந்திராவில் புழங்கி வருவதும் தெரிய வந்துள்ளது. அரசியல்வாதிகள், நடிகர்கள் விளையாட்டு வீரர்கள், கடவுள்கள் பெயரிலும் போலி கார்டுகளை விநியோகித்துள்ளனர்.
கடந்த ஜூன் மாதம் விஜியநகரம் மாவட்டத்தில் லட்சுமி என்ற பெண்ணுக்கு வழங்கப்பட்ட கார்டில் சானியா மிர்ஸாவின் புகைப்படம் இடம் பெற்று சர்ச்சையை எழுப்பியது நினைவிருக்கலாம்.