கல்வி உதவித்தொகை வழங்க ஆன்லைன் வசதி
சென்னை: தமிழக அரசிடம் கல்வி உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்திருக்கும் பிற்பட்டோர் மற்றும் மிகவும் பிற்பட்டோர் பிரிவைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் தங்களின் விண்ணப்ப நிலவரத்தை இனி இணையதளம் மூலமாகவே தெரிந்துகொள்ளலாம்.
http://edistrict.tn.nic.in என்ற இணைய முகவரியின் மூலம் மாணவர்கள் தங்களின் விண்ணப்ப நிலவரம் குறித்து தெரிந்துகொள்ள முடியும்.
பிற்பட்டோர் நலத்துறை மூலம் உதவி பெறும் மாணவ- மாணவிகள் குறிப்பிட்ட நேரத்தில் உடனடியாக கல்வி உதவித்தொகை பெறுவதற்காக இந்த இணைய தள வசதி தொடங்கப்பட்டுள்ளது.
தமிழக பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் பூங்கோதை ஆகியோர் திட்டத்தை தொடங்கி வைத்தனர். நிகழிச்சியில் அமைச்சர் பூங்கோதை பேசுகையில்,
'பிற்பட்டோர் நலத்துறை மூலம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதில் பல்வேறு நடைமுறை சிரமங்கள் இருந்து வந்துள்ளன.
இதை தவிர்ப்பதற்காக தகவல் தொழில்நுட்பத் துறையுடன் இணைந்து, உதவித் தொகை வழங்குவதை எளிதாக்கும் வகையில் புதிய மென்பொருள் உருவாக்கியுள்ளோம்.
உதவித்தொகைக்கான விண்ணப்பம், மற்றும் எவ்வளவு தொகை என்பது உள்ளிட்ட தகவல்களை ஆன்லைன் மூலமாகவே தெரிந்துகொள்ளலாம். ஆதி திராவிடர் சமூகநலத்துறையிலும் இந்த வசதி செய்யப்பட உள்ளது' என்றார்.
அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசுகையில், 'பிற்பட்டோர் நலத்துறை மூலம் உதவி பெறும் மாணவ- மாணவிகள் குறிப்பிட்ட நேரத்தில் உடனடியாக கல்வி உதவித்தொகை பெறுவதற்காக இந்த இணைய தளம் தொடங்கப்பட்டுள்ளது.
உதவித் தொகைக்காக 4.25 லட்சம் மாணவ- மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். இதற்காக ரூ.68.40 கோடியை முதல்- அமைச்சர் ஒதுக்கி உள்ளார்.
மாணவர்கள் மனு செய்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து உத்தரவிடப்பட்டு கல்வி நிறுவனங்கள் அந்த காசோலையைப் பெற தாமதம் ஆகிறது. மேலும் குறிப்பிட்ட மாணவர்களுக்கு எவ்வளவு தொகை அனுப்பப்பட்டது என்ற விவரமும் அந்த மாணவர்களுக்கு தெரிவதில்லை.
இந்த ஆண்டு முதல் ஆன்லைன் மூலம் உதவித்தொகை பெறுவதற்காக இந்த சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இனி கல்லூரி முதல்வர்களின் ஒப்புதல் பெற்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். அதுபற்றிய விவரங்களையும் ஆன்லைனில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். எவ்வளவு உதவித்தொகை, எப்போது கிடைக்கும் என்ற தகவலையும் தெரிந்து கொள்ளலாம்.
முதல் கட்டமாக தர்மபுரி, கிருஷ்ணகிரி, அரியலூர், பெரம்பலூர், கோவை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது' என்று கூறினார்.