2012க்குள் குடிசையில்லா நகரங்கள்: மத்திய அரசு இலக்கு
ரங்போ (சிக்கிம்): வரும் 2012ம் ஆண்டில் இந்திய நகர்ப்புறங்களில் குடிசைகளே இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்து அரசு செயல்படுவதாக மத்திய அமைச்சர் ஷெல்ஜா கூறினார்.
சிக்கிம் மாநிலத்தில் ரங்போ நகரில் மத்திய அரசின் வீட்டு வசதி திட்டப்பணிக்கு அடிக்கல் நாட்ட வந்த மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்பபுற வறுமை ஒழிப்பு அமைச்சர் ஷெல்ஜா இதுபற்றி மேலும் கூறிகையில்,
'சிறு நகரங்கள் மற்றும் மாநகரங்களில் வாழும் ஏழை மக்களுக்கு அடிப்படை இருப்பிட வசதிகளை வழங்க வேண்டும் என்பது அரசின் முக்கிய கொள்கை. இதற்கு தற்போது முக்கியத்தும் தரப்படுகிறது.
நியாயமான விலைகளில் குடியிருப்பு மற்றும் இதர அடிப்படை வசதிகளை செய்து தருவதற்கு முன்னுரிமை அளித்து அரசு செயல்படும். வரும் 2012ம் ஆண்டில் இந்திய நகர்ப்புறங்களில் குடிசைகள் இல்லாத நிலையை எட்டவேண்டும் என்ற இலக்கை நோக்கி அரசு செயல்படுகிறது' என்றார்.