இந்து அமைப்புகள் ஒருங்கிணைத்து போராடவேண்டும்- எடியூரப்பா
சென்னை: பொது அம்சத்திற்காக போராடுவதற்கும் தேசம் மற்றும் மக்கள் நலனுக்காகவும் இந்து அமைப்புகள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு ஒரே குடைக்குள் கொண்டு வரப்பட வேண்டும் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா பேசினார்.
சென்னையில், நடந்த இந்து ஆன்மிகம் மற்றும் சேவைகள்' கண்காட்சி தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக கர்நாடக முதல்வர் எடியூரப்பா கலந்து கொண்டார்.
விழாவி்ல் எடியூரப்பா பேசுகையில், 'இந்து ஆன்மீக அமைப்புகள் சமூக கண்ணோட்டம் கொண்டவை அல்ல என்றும், மக்களுக்கு சேவை செய்யும் நோக்கம் அவற்றுக்கு கிடையாது என்றும் பொதுவான கருத்து நிலவுகிறது. இது தவறு.
உலகம் முழுவதுமே ஒரு குடும்பம் என்ற தத்துவத்தை உலகிற்கு கொடுத்தவர்கள் நமது மூதாதையர்களும், நம்நாட்டு துறவிகளும் தான்.
உலக அளவில் விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு ஆகிய துறைகளில் ஏற்பட்டுள்ள புரட்சியை பார்க்கும்போது, அவர்கள் சொன்ன வார்த்தை எவ்வளவு உண்மை என்பது புரிகிறது.
இந்து ஆன்மிக அமைப்புகளுக்கு வழிகாட்டுவதற்கு ஒரு தாய் அமைப்பு கிடையாது. மேலும், பல்வேறு உட்பிரிவுகளாக பிரிந்து பலஹீனமாகி கிடக்கின்றன. அவற்றுக்கிடையே ஒருங்கிணைந்த அணுகுமுறையும் இல்லை.
எனவே, பொது அம்சத்திற்காக போராடுவதற்கும் தேசம் மற்றும் மக்கள் நலனுக்காகவும் இந்து அமைப்புகள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு ஒரே குடைக்குள் கொண்டுவரப்பட வேண்டும்.
புத்த மதம், ஜைன மதம், வீர சைவம், சீக்கிய மதம் ஆகியவற்றின் பிறப்பிடம் இந்தியாதான். இவை அனைத்தும் இந்து மதத்தின் கிளைகளாக உள்ளன. தத்துவத்தில் அவை அனைத்தும் ஒத்திருக்கின்றன. எனவே இவற்றையும் சேர்த்து ஒருங்கிணைக்கலாம்.
இந்து மதத்தில் உள்ள பல்வேறு நம்பிக்கைகளை ஒருங்கிணைப்பதற்கு இதுபோன்ற சேவை கண்காட்சி உதவும். இது ஒரு தனிப்படையாக உருவாகி இந்துக்கள் பற்றிய தவறான கருத்துகளை உடைக்க உதவும்.
பெங்களூரில் தெய்வப் புலவர் திருவள்ளுவரின் சிலையையும், சென்னையில் புனித கவிஞர் சர்வக்ஞர் சிலையையும் திறந்து வைத்ததின் மூலம் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா அரசுகளுக்கு இடையே ஒரு நல்லுறவு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் இரண்டு மாநில மக்களுக்கிடையே நட்பும், ஒத்துழைப்பும் உருவாக வழிபிறந்துள்ளது.
ஆன்மிகமும், சேவையும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். ஆன்மிக சிந்தனை இல்லாத சேவையும் இல்லை, சேவை நோக்கம் இல்லாத ஆன்மீகமும் இல்லை' என்றார்.












Click it and Unblock the Notifications