அந்தகாலத்து மதராஸ் பட்டினத்தை கண்முன் நிறுத்தும் பொருட்காட்சி
சென்னை: பல்லாண்டுகளுக்கு முந்தைய மதராஸ் பட்டினத்தை கண்முன் நிறுத்தும் வகையில் சென்னை தீவுத்திடல் பொருட்காட்சியில் பல அரிய தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
பொருட்காட்சியில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் அமைக்கப்பட்ட அரங்கை மாநில செய்தி விளம்பரத் துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி திறந்துவைத்தார்.
பொருட்காட்சியை பார்வையிட்ட பின்னர்
அவர் கூறுகையில், 'சென்னை பெருநகரம் உருவாக்கப்பட்டது, நகரம் சட்டரீதியாக அமைக்கப்பட்டது, இப்போதைய நிலவரப்படி திட்டங்கள் அனுமதி வழங்கப்படும் விவரம், நிலப்பயன்பாடு விவரம், ஒ.எஸ்.ஆர் நிலம் ஆகியவை பற்றி முறையாக இந்த அரங்கில் தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
அவற்றை பொதுமக்கள் பார்த்து கட்டிடங்கள் தொடர்பான விழிப்புணர்வு பெறவேண்டும். சென்னை பெருநகர வளர்ச்சி குழும அலுவலகத்திற்கு வராமலேயே இருப்பிடத்தில் இருந்து கொண்டே இணையதளத்தை அணுகி நில உபயோக வரைபடங்களின் நகல்களை இலவசமாக எடுத்துக்கொள்ளலாம்' என்றார்.
அரங்கில் பல அரிய புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன. செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் கி.பி.1639ம் ஆண்டு தோற்றம், இப்போதைய டி.டி.கே.சாலை அப்போது மவுபரீஸ் சாலையாக இருந்தது போன்ற தகவல்கள் படங்களுடன் விளக்கப்பட்டுள்ளன.
1885ம் ஆண்டின் சென்னை துறைமுக காட்சி, விக்டோரியா ஹால், சென்னை பல்கலைக்கழகத்தின் செனட் ஹாலை 1890 ம் ஆண்டு எடுத்த படம், பைகிராப்ட் சாலையின் பழைய தோற்றம், நேப்பியார் பாலத்தின் பழைய தோற்றம், சேப்பாக்கம் அரண்மனை, சென்டிரல் ரயில் நிலைய அரிய புகைப்படம் ஆகியவற்றை பார்க்கலாம்.
இப்போது நிற்கக்கூட இடமில்லாமல் பரபரப்பாக காணப்படும் பூக்கடை பஜார் பகுதியில் முந்தைய காலத்தில் ஜாக்கெட் அணியாத பெண்கள் பூ வியாபாரம் செய்த காட்சியும் இடம் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications