டிச 4ல் தூத்துக்குடியில் கடற்படை வாரவிழா: ஹெலிகாப்டர் சாதனை நிகழ்ச்சி இல்லை
தூத்துக்குடி: கடற்படை வாரவிழா கொண்டாட்டங்கள் டிச 2,3,4 ஆகிய தேதிகளில் பாளையங்கோட்டை அரசு பொறியியல் கல்லூரி அருகே உள்ள கடற்படை தகவல் பெரும் மையத்தில் நடைபெறுகின்றன என்று விஜயநாராயணம் ஐஎன்எஸ் கடற்படை கமாண்டர் சுபாஷ் காடா தெரிவித்தார்.
இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது,
கடந்த 1971-ம் ஆண்டு நடந்த இந்தியா-பாகிஸ்தான் போரில் டிசம்பர் 4-ம் தேதி இந்திய கடற்படை அதிரடி தாக்குதலை நடத்தி வெற்றி பெற்றது. இதை நினைவு கூறும்வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் 4-ம் தேதி கடற்படை வாரவிழா கொண்டாடப்படுகிறது.
இந்திய கடற்படை குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், போர்க்காலங்களில் தாய்நாட்டிற்காக உயிரைத் தியாகம் செய்தவர்களை நினைவு கூறும்பொருட்டும் இவ்விழா கொண்டாடப்படுகிறது.
கடற்படை வாரவிழாவின் ஒரு பகுதியாக வரும் டிச 2,3,4 ஆகிய தேதிகளில் பாளையங்கோட்டை அரசு பொறியியல் கல்லூரி அருகே உள்ள கடற்படை தகவல் பெரும் மையத்தில் பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வரும் 3-ம் தேதி கடற்கரையை தூய்மையாக வைப்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடற்படை வீரர்கள் கன்னியாகுமரி கடற்கரையை சுத்தப்படுகின்றனர். தொடர்ந்து வரும் ஜனவரி மாதம் தூத்துக்குடி துறைமுகத்திற்கு இந்திய கடற்படைக்கு சொந்தமான போர்க்கப்பல்கள் வருகின்றன.
இதை பொதுமக்கள், மாணவர்கள் பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள். மோசமான வானிலை காரணமாக இந்த ஆண்டு ஹெலிகாப்டர் சாதனை நிகழ்ச்சி மட்டும் நடைபெறாது. இவ்வாறு அவர் கூறினார்.