'பொடிசுகளின் துணிச்சல் பெரிசுகளுக்கு இல்லாம போச்சே!'
டெல்லி: 'ஒரு குழந்தை நீரில் மூழ்குவதை பார்த்து பதைத்துப்போய் என் மகன் குளத்தில் குதித்து இறந்தான். வேடிக்கை பார்த்தவர்களுக்கு அந்த துணிச்சல் இருந்திருந்தால் என் மகன் உயிரோடு இருந்திருப்பான்' என்று வீரச்செயல் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட சிறுவனின் பெற்றோர் கூறினர்.
2009ம் ஆண்டுக்கான தேசிய வீரதீர செயலுக்கான விருது பெறுவோர் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
பதட்டமான சூழ்நிலையிலும் மனிதாபிமான உணர்வோடும், அசாத்திய துணிச்சலுடனும் செயல்பட்ட 21 சிறுவர், சிறுமியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
வரும் ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று டெல்லியில் நடக்கும் அணிவகுப்பு நிகழ்ச்சியில் இவர்களுக்கு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் பதக்கம், விருது சான்றிதழ் மற்றும் பண முடிப்பு வழங்க உள்ளார்.
மணிப்பூரைச் சேர்ந்த சிறுமி தொதொய் குமாந்தெம். வயது ஆறு. இரண்டாம் வகுப்பு படிக்கிறார்.
ஐந்து வயது குழந்தை ஒன்று ஆறடி ஆழமுள்ள தண்ணீர் குட்டையில் விழுந்ததைப் பார்த்த இச்சிறுமி துளியும் பயமின்றி தண்ணீரில் குதித்து குழந்தையை காப்பாற்றியுள்ளார்.
இதேபோல் தீபக் குமார் என்ற 12 வயது சிறுவன் நீரில் மூழ்கும் குழந்தையை பார்த்துவிட்டு காப்பாற்ற தண்ணீரில் குதித்தார். ஆனால் ஆழம் அதிகமாக இருந்ததால் அவரும் மூழ்கி இறந்துவிட்டார்.
ஆனால் இதை அங்கிருந்த மக்கள் சூழ்ந்து நின்று வேடிக்கை பார்த்திருக்கிறார்கள் என்றும், தீபக்கிற்கு இருந்த துணிச்சல் அங்கிருந்த பெரியவர்களுக்கு இருந்திருந்தால் என் மகன் இன்று உயிரோடு இருப்பான் என்று தீபக்கின் பெற்றோர் மனம் நொந்து கூறினர்.
மணிப்பூரைச் சேர்ந்த 10 வயது சிறுமி பிரீத்தி தேவி. இவர்களுக்கு சொந்தமான கடையில் சமூக வீரோதிகள் சிலர் வெடிகுண்டுகளை போட்டுவிட்டு சென்றுள்ளனர்.
அப்போது தன் அப்பா, அம்மாவையும், கடையில் இருந்த பொதுமக்களையும் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் வெடிகுண்டை துணிச்சலாக கையாலேயே எடுத்து அருகில் இருந்த மைதானப் பகுதியில் வீசினார்.
அவர் வீசிய நேரத்தில் குண்டு வெடித்துள்ளது. இதில் பிரீத்தியின் உடலில் காயம் ஏற்பட்டது. எனினும் கடையில் அந்த குண்டுவெடிப்பு நடந்திருந்தால் உயிர்சேதம் ஏற்பட்டிருக்கும் என்பதால் சிறுமியின் துணிச்சலை பலரும் அப்போதே வியந்து பாராட்டினார்கள்.
ஹரியானாவைச் சேர்ந்த 13 வயது சிறுவன் கௌரவ் சிங் சைனி. 2008ம் ஆண்டு நைனா தேவி கோயில் நெரிசலில் 150க்கும் மேற்பட்டோர் பலியான செய்தி அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த சமயத்தில் கோயிலுக்கு சென்றுகொண்டிருந்தார் கௌரவ். அப்போது மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டதாக திடீர் வதந்தி பரவ, எல்லோரும் வதந்தியால் அவரவரின் உயிரை காப்பாற்றிக்கொள்ளவும், தப்பிப் பிழைக்கவும் தாறுமாறாக ஓடிக்கொண்டிருந்தார்கள்.
ஒரு இடத்தில் வாயில் பகுதியில் தடுப்பு போடப்பட்டிருந்தது. ஒட்டுமொத்தக் கூட்டமும் இந்த வாயில் பகுதிக்கு வந்துவிட்டது. தடுப்பு போடப்பட்டிருந்ததால் மக்கள் வெளியேற முடியாமல் ஒருவர் மீது ஒருவர் விழுந்தடித்து செத்துக்கொண்டிருந்தனர்.
குழந்தைகளும், முதியவர்களும், பெண்களும் நெரிசலில் சிக்கி மூச்சுத்திணறிக் கொண்டிருந்தனர்.
அப்போது கோயிலின் மேற்பரப்பில் நின்று இதை பார்த்த கௌரவ், அறுந்து தொங்கிக்கொண்டிருந்த ஒரு கம்பியின் மூலம் ஏராளமான குழந்தைகளை காபாற்றி உள்ளார்.
இதுபோல கோவா, மிசோரம், கேரளா, மேகாலயா, குஜராத், ராஜஸ்தான், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 21 பேர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications