மாசி விழா- திருச்செந்தூரில் நாளை தேரோட்டம்
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில் மாசி திருவிழா 8ம் நாளான நேற்று சுவாமி சண்முகர் பச்சை சாத்தி கோலத்தில் வீதி உலா நடந்தது. நாளை தேரோட்டம் நடக்கிறது.
திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் மாசி திருவிழா கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
திருவிழாவை முன்னிட்டு தினமும் காலை, மாலை சுவாமி குமரவிடங்கபெருமாள், தெய்வானை அம்பாள் வீதி உலா வந்து மேலக்கோயிலை சேர்ந்தனர்.
திருவிழாவின் 8ம் நாளான நேற்று அதிகாலை சுவாமி சண்முகர் வெள்ளி சப்பரத்தில் வெள்ளி சாத்தி கோலத்தில் வெங்குபாஷா மண்டகப்படியிலிருந்து எழுந்தருளி வீதி உலா வந்து சிவன் கோவில் சேர்ந்தார். அங்கு சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் நடந்தது.
தொடர்ந்து சுவாமி பச்சை பட்டு சாத்தி கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். காலை 11.45க்கு சுவாமிக்கு மகா தீபாரதனை நடந்தது. பின்னர் சுவாமி பச்சை சாத்தி கோலத்தில் சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா நடந்தது.
பச்சை சாத்தி வீதி உலாவின்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பச்சை பட்டு, மரிக்கொழுந்து மாலை சாத்தியும் திருக்கண் சாத்தியும் சுவாமியை தரிசனம் செய்தனர்.
திருவிழாவின் உச்சகட்ட நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (27ம் தேதி) நடக்கிறது. அதிகாலை 5.30 மணிக்கு முதலில் விநாயகர் தேரும், அதனை தொடர்ந்து குமரவிடங்க பெருமாள், வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளிய தேரும், 3வதாக அம்பாள் தேரும் பக்தர்களால் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications