செம்மொழி மாநாட்டு தீர்மானங்கள்-நிறைவேற்ற முதல்வர் ஆலோசனை
சென்னை: உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நிறைவேற்றுவது தொடர்பாக அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் கருணாநிதி இன்று ஆலோசனை நடத்தினார்.
சென்னை கோட்டையில் உள்ள செம்மொழி தமிழாய்வு நூலக அரங்கில் இந்தக் கூட்டம் நடந்தது.
இதில் மத்திய அமைச்சர்கள் மு.க.அழகிரி, ராசா, மாநில அமைச்சர்கள் அன்பழகன், ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், வீரபாண்டி ஆறுமுகம், பொன்முடி, சுரேஷ்ராஜன், சாமிநாதன், தங்கம் தென்னரசு, பூங்கோதை, மற்றும் கனிமொழி எம்.பி, தலைமை செயலாளர் ஸ்ரீபதி, தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜேந்திரன், சுற்றுலாத் துறை செயலாளர் இறையன்பு உள்ளிட்ட துறை செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
இதி்ல் கோவை மாநாட்டு தீர்மானங்களை ஒவ்வொரு துறையும் எவ்வாறு நிறைவேற்ற வேண்டும் என்பது குறித்து பல்வேறு ஆலோசனைகளை முதல்வர் கருணாநிதி வழங்கினார்.
காமராஜர் பிறந்த நாள்-ரூ. 1.33 கோடி ஒதுக்கீடு:
இந் நிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திமுக அரசு 2006ல் பொறுப்பேற்றதும் பெருந்தலைவர் காமராசர் கல்வி வளர்ச்சிக்காக ஆற்றிய தொண்டுகளைப் போற்றும் வகையில், அவருடைய பிறந்த நாளான ஜூலை 15ம் நாளை கல்வி வளர்ச்சி நாள் என அறிவித்து, ஆண்டுதோறும் அந்நாளில் தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மாணவ மாணவியர் புத்தாடை அணிந்து, விழா எடுத்து, காமராசர் திருவுருவப் படத்தை அலங் கரித்து, மகிழ்ச்சியுடன் கொண்டாடிட ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டுமென்று முதல்வர் கருணாநிதி 24.5.2006ம் தேதியன்று ஆணையிட்டார்.
அந்த ஆணையைத் தொடர்ந்து, கடந்த நான்காண்டுகளாகத் தமிழகத்தில் உள்ள பள்ளிகள் அனைத்திலும் பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாள் என மிகச் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டுள்ளது.
அதேபோல, இந்த ஆண்டின் ஜூலை 15ம் நாளன்றும் மாணவ மாணவியரிடையே பல்வேறு போட்டிகளையும் கலை நிகழ்ச்சிகளையும் நடத்திப் பரிசுகள் வழங்கி, ஊக்கமளித்துப் பெருந்தலைவர் காமராசர் புகழ்பாடும் வகையில் தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி நாள் விழா எழுச்சியுடன் கொண்டாடப்பட வேண்டுமென்பதற்காக தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு 94 லட்சத்து 93 ஆயிரம் ரூபாய்;
உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு 13 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் என அரசு நிதி ஒதுக்கீடாக 1 கோடியே 8 லட்சத்து 63 ஆயிரம் ரூபாயும்,
தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழக நிதியிலிருந்து 24 லட்சத்து 58 ஆயிரத்து 200 ரூபாயும் ஆக மொத்தம் 1 கோடியே 33 லட்சத்து 21 ஆயிரத்து 200 ரூபாய் அனுமதித்து முதல்வர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.