24 மணி நேரத்தில் 485 உணவு வகை - சென்னை சமையலர் கின்னஸ் சாதனை!
சென்னை: 24 மணி நேரத்தில் 485 விதமான உணவு வகைகளை தயாரித்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார் சென்னையைச் சேர்ந்த சமையலர்.
சென்னையை சேர்ந்தவர் ஜேக்கப். வயது 34. சமையல் கலை பட்டத்தில் தங்கப் பதக்கம் பெற்றவர்.
சென்னை உட்பட பல்வேறு மெட்ரோ நகரங்களில் உள்ள ஸ்டார் ஓட்டல்களுக்கு சமையல் ஆலோசகராக உள்ளார்.
இவர், தொடர்ந்து 24 மணி நேரம் சமையல் செய்து, 485 விதமான இந்திய சைவ அசைவ உணவு பதார்த்தங்களை செய்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெறும் முயற்சியில் ஈடுபட்டார்.
இதற்காக சென்னை ரேடிஸன் ஓட்டலில் நேற்று முன்தினம் காலை, தனது முயற்சியை ஜேக்கப் தொடங்கினார்.
கின்னஸ் சாதனைக்காக இதுவரையில்லாத அளவுக்கு 485 வகையான உணவுகளை சமைத்து ஜேக்கப் அசத்தினார்.
அவர் கின்னஸ் சாதனை செய்ததை கின்னஸ் சாதனை மதிப்பீட்டுக் குழுத் தலைவர் லூசியா சினிகலேசி நேரில் பார்வையிட்டார்.
இதுகுறித்து ஜேக்கப் கூறுகையில், '485 உணவு வகைகளை சமைத்தேன். அதில் 150 வகைகள் அசைவம் ஆகும். இந்த சாதனையை முறியடிக்க நான் மீண்டும் முயற்சி செய்வேன்' என்றார்.
கின்னஸ் சாதனைக்கான சான்றிதழை செய்தித்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி, ஜேக்கப்புக்கு வழங்கி பாராட்டு தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications