வ.உ.சி.யின் 'திலக மகரிஷி' கட்டுரை தொகுப்பு - நல்லக்கண்ணு வெளியிட்டார்
சென்னை: பாலகங்காதர திலகரைப் பற்றி 'திலக மகரிஷி' என்ற தலைப்பில் வ.உ.சிதம்பரனார் 'வீரகேசரி' நாளிதழில் எழுதிய கட்டுரைகள் நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளன.
டாக்டர் மா. ராசமாணிக்கனார் இதழியல் ஆய்வு மையம் சார்பில் முனைவர் ம.ரா.அரசு தொகுத்துள்ள இந்நூலின் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.
இந்திய கம்யூனிஸ்ட் தேசிய கட்டுப்பாட்டுக் குகு தலைவர் ஆர்.நல்லகண்ணு வெளியிட்டார். சிற்பக் கலை ஆர்வலர் தேவமணி ரபேல் முதல் நூலை பெற்றுக் கொண்டார்.
நூல் வெளியீட்டு விழாவில் ஆர். நல்லகண்ணு பேசுகையில், 'வ.உ.சி.யின் திலக மகரிஷி கடந்த நூற்றாண்டின் தொடக்க காலத்தை பிரதிபலிக்கும் நல்ல வரலாற்று ஆவணம்.
இந்நூலில் தனது குருவான திலகரைப் பற்றி, ஆத்மார்த்த உணர்வோடு எழுதியுள்ள வ.உ.சி பல நல்ல சொல்லாடல்களைப் பயன்படுத்தியுள்ளார்.
திலகர் கால அரசியலை, அக்காலத்தில் நடைபெற்ற விவாதங்களை அறிந்து கொள்ளவும், அவற்றை இன்றைய பிரச்னைகளோடு பொருத்திப் பார்க்கவும் இந்நூல் மிகவும் பயன்படும்.
பாரதியார் திலகரை 'முனி' என்றார். வ.உ.சி 'ரிஷி' என்றார். அவர்கள் இருவரும் அறிவால், உணர்வால், சிந்தனையால் ஒன்றாய் திகழ்ந்தார்கள்' என்று பேசினார்.
தஞ்சை தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் இ.சுந்தரமூர்த்தி, ஆய்வாளர் பெ.சு. மணி உள்ளிட்ட பலரில் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார்கள்.