மாற்றுத்திறனாளிகளுக்கான திருமண நிதி ரூ.25 ஆயிரமாக உயர்வு: கருணாநிதி உத்தரவு
சென்னை: மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் திருமண நிதியுதவியை ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரமாக உயர்த்தி தமிழக முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து நேற்று தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
2006-7ம் நிதியாண்டு முதல் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் நிதியுதவியை ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்தப்பட்டது.
இதுமட்டுமின்றி 2009-10ம் ஆண்டு மாற்றுத் திறனாளிகளை மணக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கும் திருமண உதவித்தொகை வழங்கும் திட்டம் நீட்டித்து ஆணை பிறப்பிக்கப்பட்டது.
இந்த ஆண்டு முதல் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவில் வழங்கப்படும் திருமண உதவித்தொகையை ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரம் ஆக உயர்த்தப்பட்டுள்ளதால், மாற்றுத்திறனாளிகளுக்கான திருமண நிதியுதவித் தொகையையும் ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்படும் என கடந்த மே மாதம் 15-ம் தேதி முதல்வர் அறிவித்திருந்தார்.
இதையடுத்து மாற்றுத்திறனாளிகளுக்கான திருமண நிதியுதவியை ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரமாக உயர்த்தி தமிழக முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். இதில் ரூ.12,500 திருமண செலவிற்கு ரொக்கமாகவும், ரூ.12,500 தேசிய சேமிப்பு பத்திரமாகவும் வழங்கப்படும்.
இந்த திட்டத்தின் கீழ் திருமண நிதியுதவியைப் பெற தம்பதியரில் ஒருவர் மாற்றுத் திறனாளியாக இருக்க வேண்டும். வருமான உச்சவரம்பு மற்றும் கல்வித் தகுதி எதுவும் இத்திட்டத்திற்கு இல்லை.
சட்டப்பூர்வமான திருமண வயது அடைந்தவர்கள் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையுடன் விண்ணப்பித்தால் இந்த நிதி வழங்கப்படும் என்று அதில் அறிவிக்கப்பபட்டுள்ளது.