'அன்னைத் தமிழ்' இன்று எங்கும் இல்லை, எதிலும் இல்லை: சீமான்
சென்னை: தமிழை உயர்நீதிமன்றத்தில் பயன்பாட்டு மொழியாக அறிவிக்க வேண்டும் என்று நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.
அர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
உயர் நீதிமன்றத்தில் தமிழை ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும் என்னும் கோரிக்கையை வலியுறுத்தி கடந்த மூன்று நாட்களாக சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கறிஞர்கள் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். இன்று சாலை மறியலும் மேற்கொண்டுள்ளனர்.
தன் தாய் நாட்டில் தாய்மொழியில் பேச வேண்டும் என்னும் கோரிக்கையை வலியுறுத்தி வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம் என்பது நாம் அனைவரும் வெட்கித் தலைகுனிய வேண்டிய நிகழ்வாகும்.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் 348 (2) மற்றும் 1963ம் ஆண்டைய ஆட்சி மொழிச் சட்டத்தின் பிரிவு 7 ஆகியவை மிகத் தெளிவாக உள்ளன. அதன்படி உயர்நீதிமன்றங்களில் அந்தந்த மாநில மொழியை அலுவல் மொழியாக வைத்துக் கொள்ள இவை அனுமதிக்கின்றன.
ஏற்கனவே உத்தரப் பிரதேசம், பிகார், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநில உயர் நீதிமன்றங்களில் அந்த மாநில ஆட்சி மொழியே, அலுவல் மொழியாக உள்ளது.
இந்த சட்டப் பிரிவுகளை மாநிலத்திற்கு மாநிலம் பாரபட்சமாக அமல்படுத்த முடியாது.
ஒவ்வொரு மாநிலமும், அந்த மாநில உயர் நீதிமன்றத்தின் ஆட்சி மொழியாக அந்த மாநில ஆட்சி மொழியை அமல்படுத்த சட்டப்பூர்வ உரிமை உண்டு.
அந்த அடிப்படையில் சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக, பயன்பாட்டு மொழியாக அறிவிக்க வேண்டும்.
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று இருக்க வேண்டிய நம் 'அன்னைத் தமிழ்' இன்று வரை எங்கும் இல்லை, எதிலும் இல்லை. இதுவரை ஆட்சியில் இருந்த ஆட்சியாளர்கள் இது குறித்து சிந்திக்கவும் இல்லை.
வெற்றுக் கோஷங்களிலேயே காலம் கடத்திவிட்டனர்.
தமிழ் செம்மொழி என்று வெற்றுப் பெருமை பேசித் திரிவதும், அதற்கு ஒரு மாநாடு என்று புகழ் பாடித் திரிவதும் மொழி வளர்ச்சிக்கு உதவாது.
தமிழை அனைத்து இடங்களிலும் சாகடித்துவிட்டு தமிழுக்கு மாநாடு நடத்தாமல் அனைத்து இடங்களிலும் தமிழை அரியணை ஏற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், முதற்கட்டமாக சென்னையிலும், சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையிலும் தமிழை அலுவல், மற்றும் பயன்பாட்டு மொழியாக அறிவிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் சீமான்.